Wednesday 12 July 2023

சாதியே இனம்

சாதியே இனம்

 தேசிய வாதத்தின் தாயகம் ஐரோப்பா என்று கூறுவர். ஆனால் உலகத்தில் தமிழர்கள்தான் மொழிவழி அமைந்த இன தேசியத்தை முதன்முதலில் எழுதியவர்கள்.
 உலகிலேயே முதன்முதலில் மொழியின் பெயரால் இனத்தையும் தேசத்தை குறிப்பிட்டு எழுதியதும் மொழியின் பெயரால் அரசுகளின் கூட்டணி அமைத்ததும் தமிழர்தான்.
  அந்த வகையில் தேசியத்திற்கான முதல் வரையறையை எடுத்துக் கொடுத்தது தமிழ் இலக்கியம் தான். 
 நாம் நெடுங்காலமாக வெற்றியை ஈட்டி வல்லரசாக திகழ்ந்து வந்தோம்.
 பிறகு நமது வீழ்ச்சி இனக்கலப்பினாலும் ஒற்றுமை இன்மையினாலும் வந்தேறிகளின் சதியினாலும் தொடங்கியது. 
 ஆம், கிமு வில் இருந்து கிபி 13 ஆம் நூற்றாண்டு வரை வல்லரசாக வீற்றிருந்த காலங்களில் பொறாமை கொண்டு நம் மீது எத்தனையோ பேரரசுகள் சிற்றரசுகள் தாக்குதல் நடத்தின. மத ரீதியான குழப்பங்கள் ஏற்படுத்தி நம்மை சிதைக்கவும் முயன்றன. பல நெடுங்காலம் நமது இனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இறுதியில் வெற்றியடைந்து நாம் வீழ்த்தப்பட்டோம். 
 வீழ்ந்தும் 800 ஆண்டுகளில் எத்தனையோ முறை எழ முயன்றோம். இன்று வரை வெற்றி அடைய முடியவில்லை என்றாலும் இன்று நம்மிடம் மிக உறுதியான இனவெழுச்சி ஏற்பட்டுள்ளது.
 நமது இளைஞர்களின் இனரீதியான எழுச்சி என்பது தமிழகத்திலே பக்கம் பக்கமாக எழுதிய எழுத்தாளர்களால் வந்தது இல்லை. வீதி வீதியாக பேசிய இயக்கங்களால் வந்ததில்லை. இது இனப்பற்றை மட்டுமே முதல் தகுதியாகக் கொண்ட ஒரு தலைவன் தனது ராணுவ சிந்தனையின் மூலம் ஈழத்தில் இனரீதியான படைகட்டி தாய் நிலத்தை மீட்டு வரிசையாகப் புரிந்த சாதனைகளினால் ஏற்பட்டது. ஆம், உலக வல்லரசுகள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து அந்த தலைவனை வீழ்த்திய போதும் இறுதி நொடி வரை அவருடைய உறுதியான நிலைப்பாடு இன்று உலகத் தமிழர்கள் மனத்தில் விடுதலைத் தீயை மூட்டி இன்று இளைஞர்கள் தமிழ் தேசியத்தின் மீது விருப்பம் கொண்டு சாதி, மொழி, மதம், நாடு என அனைத்தையும் கடந்து இனமாக திரண்டு நிற்க காரணம்.
 இன்றைய சூழலில் பழைய கருத்தியல்வாதிகள் தங்களுக்குள் மோதிக் கொள்வதுடன் ஒருவரை ஒருவர் 'குடி தேசியம்' என்றும் 'மாநில தேசியம்' என்றும் 'வரட்டு வாதம்' என்றும் தூற்றிக்கொண்டு தற்கால இளைஞர்களை குழப்புகின்றனர்.
 சாதி இல்லாமல் வந்தேறிகளை எப்படி அடையாளம் காண்பது என்ற கேள்விக்கு இவர்களிடம் பதில் இல்லை.

 உலகில் புரட்சி செய்த மக்கள் தங்களுடைய இன, மத, ஜாதி அடையாளங்களை ஒழித்து விட்டு ஒன்று சேரவில்லை.
 உலகம் போற்றும் புரட்சியாளர்கள் தங்கள் குடிப்பெயருடனும் மொழி அடையாளத்துடனும் மத அடையாளத்துடனும் இருந்தார்கள்.
 தன்னுடைய உண்மையான எந்த அடையாளத்தையும் மறைக்காமல்தான் அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி புரட்சி செய்தனர்.

 தமிழகத்தில் (இன)தேசியத்தை 'மொழித் தேசியம்' என்றாக்கி 'தமிழ் பேசுபவர் எல்லாம் தமிழர்' என்ற மாயையை உருவாக்கி தமிழை நன்கு கற்ற பிற வந்தேறி இனங்கள் தமிழை வைத்தே தமிழரை வீழ்த்தி தமிழர் தலையில் அமர்ந்து சுரண்டி கொழுப்பது பல ஆண்டுகளாக நடக்கிறது.

  இந்த வேளையில் நாம் மொழியை மட்டும் வைத்துக்கொண்டு நம்மை அடையாளப்படுத்தினால் இச்சதியை வீழ்த்த முடியாது.
 அதே நேரத்தில் இனத்திற்கான எந்தவித ஆவணச் சான்றும் நம்மிடம் இல்லை.
 பிற மாநிலங்களில் ஆவணங்களில் தாய்மொழி இன்னது என்று சான்றிதழ்களில் இருக்கும். அதை தமிழகத்தில் திராவிடம் நீக்கிவிட்டது.
 அதனால் தான் நாம் இனத்தின் உட்பிரிவான சாதியை இன அடையாளமாக கொண்டு 'முதலில் சாதிய சமத்துவம் பிறகு சாதி ஒழிப்பு' என்கிற திட்டத்துடன் குடிவழி இனத்தேசியத்தை முன்னெடுத்து வருகிறோம்.

 எந்த ஒரு தோல்வி அடைந்த குருவும் வெற்றியடையும் சீடனை பார்த்து பொறாமை கொள்வது இயல்பு.
 நடைமுறைச் சூழல் புரியாமல் கருத்தியலில் ஊறிப்போன பழைய தலைவர்கள் இதை சாதிய எழுச்சியாக பார்ப்பதும் பழைய திராவிட சதிகாரர்கள் பேசிய அதே சினிமா வசனங்களை இவர்களும் பேசுவதும் எங்களுக்கு வருத்தமாக இருந்தாலும் எங்களை இது பாதிக்கப் போவதில்லை.
 எங்களது குடி அடையாளத்துடன் எங்கள் குடி எங்கள் பின்னே வருகிறதா இல்லையா என்பதை பற்றி கவலைப்படாமல் நாங்கள் தமிழ் தேசியத்தின் கொள்கைகளை ஏற்று இந்த உலகம் ஏற்கனவே சாதித்த நடைமுறை வழியில் நாங்களும் செல்ல முற்பட்டு உள்ளோம். அடையாளத்திற்காக குடியை முன்வைக்கிறோமே தவிர 'சுய சாதி ஆதிக்கத்தை' நிறுவ அல்ல.
 கருத்தியலில் ஊறிப் போய்விட்ட பெரியவர்களுக்கு நாங்கள் பதில் சொல்ல விரும்பவில்லை. தர்க்க ரீதியான விவாதத்தில் அவர்களுடன் சரிக்கு சரியாக மோத எங்களால் முடியும் இருந்தாலும் அவர்களை நாங்கள் எதிரிகளாக கருதவில்லை.
 ஆனாலும் எங்களை ஒத்த இளைஞர்களுக்கும் எங்களையும் விட சிறிய வயதினரான இளைஞர்களுக்கும் அவர்களையும் விட இளைய சிறுவர்களுக்கும் நாங்கள் விளக்கம் கண்டிப்பாக அளிக்க விரும்புகிறோம்.

  சில உதாரணங்களை பார்ப்போம்.

  புலிகள் இயக்கம் எழுந்த பொழுது அதிலே அனைத்து சாதி, மத, பிரதேச தமிழர்களும் இணைந்தார்கள். பிறகு ஒரு காலகட்டத்தில் அவர்கள் மீது மத ரீதியான பிளவு ஏற்படுத்தப்பட்டபோது புலிகளிடம் எங்களிலும் பலர் அந்த சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று காட்ட தரவுகள் இல்லை.
 இன்றும் புலிகளிலே எந்த ஜாதியினர் எந்த மதத்தினர் எவ்வளவு என்கிற தரவு கிடையாது. புலிகள் அத்தனை பேரையும் வெறும் தமிழர்களாக மட்டுமே பார்த்தார்கள். அதனால் அவர்கள் மீது சாதி ரீதியான மத ரீதியான பிரதேச ரீதியான விமர்சனங்கள் வைக்கப்பட்ட போது அவர்களால் அதை எதிர் கொள்ள முடியவில்லை.

 ஈழத்தை விட தமிழகத்தில் சிக்கல் அதிகம். எல்லா இடங்களிலும் மூலைக்கு மூலை வந்தேறிகள் புகுந்துள்ளனர். இவர்களே சாதிய மோதலை உருவாக்கி நடுவில் அமர்ந்து இனம் கடந்த சித்தாந்தம் (திராவிடம், மதவாதம், இந்தியம், தலித்தியம், பொதுவுடைமை, மனித நேயம்) பேசி பலன் பெறுகின்றனர். 
 இவர்களைப் பிரித்தறியவும் வேண்டும்.  அதே நேரத்தில் சாதிய பிளவுகள் மறைய வேண்டும். அதே நேரத்தில் தத்துவமும் வேண்டும். 
 இதற்காக சாதி அடையாளத்துடன் சாதிய சமத்துவம் பேசும் தமிழ்த் தேசியவாதிகள் தேவைப்படுகிறார்கள். 

 உதாரணத்திற்கு தற்போதைய பிரச்சனையான மேல் பாதி கோவில் பிரச்சனை எடுத்துக் கொள்வோம். இதிலே வன்னியர் பறையர் மோதல் ஏற்பட்டபோது வன்னியர் என்கிற பெயரை தாங்கிய ஒருவரும் பறையர் என்கிற பெயரை தாங்கிய ஒருவரும் கூட்டாக சேர்ந்து சமாதானம் ஏற்படுத்த முயன்ற போது தான் அந்தப் பிரச்சனை (அரசாங்கம் சதி செய்த போதும்) மக்கள் மத்தியில் பிளவுகளையோ கலவரங்களையோ தூண்டாமல் நீர்த்துப் போனது.

  சாதியப் பட்டதை பின்னால் போட்டுக் கொண்டு போட்டுக் கொண்டு புரட்சி செய்ய முடியாது என்பது உலகின் நடைமுறைக்கு ஒத்து வராத கூற்று.

 தமிழர்கள் தங்கள் குடிப்பட்டத்தை போட்டுக்கொண்டு குடி அடையாளத்துடன் தேசியம் பேசுவது மட்டுமே மொழித்தேசியம் என்று இத்தனை நாள் தமிழர்களை ஏமாற்றி வந்த வந்தேறிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

 இப்படி குடி அடையாளத்துடன் தேசியம் பேசும் எந்த தலைவரும் சாதிவெறி பிடித்தவர் என்றோ பிற சாதி மீது வன்மம் கொண்டவர் என்றோ பெரும்பாலும் இருப்பதில்லை.

  சில சாதியவாதிகள் கூட இந்த அரசியலின் பலம் அறிந்து தமது பிழைப்புக்காகவேணும் தமிழ்த் தேசியத்தை ஆதரிப்பது போல பேச வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி விட்டனர். ஆனால் அந்த புத்திசாலித்தனம் கூட இல்லாம தத்துவப் பெரியவர்கள் பழைய வரட்டு போக்கிலேயே இருக்கிறார்கள்.

 ஆக இங்கே குடிவழி தமிழ் தேசியம் தான் தற்போது ஒரே வழி. இது நாங்கள் விரும்பி உருவாக்கியது அல்ல காலம் கட்டாயப்படுத்தும் வழிமுறை.

 தமிழர்கள் கைக்கு அதிகாரம் வந்த பிறகு (அது மாநில அரசாக இருந்தாலும் அல்லது தனி நாடு அமைத்த ராணுவ அரசாக இருந்தாலும்) நாங்கள் சாதிகளை நீக்கி இனம் என்கிற ஆவணங்களை கொண்டு வந்து இனரீதியான சான்றுகள் அனைவருக்கும் கிடைக்கப் பெற்ற பிறகு சாதியும் சாதிய பட்டங்களும் இல்லாமல் போய் தமிழர் என்கிற ஒற்றை அடையாளத்துடன் வருங்காலங்களில் வாழ்வோம்.

 அதுவரை வந்தேறிகளின் சதியை முறியடிக்க,
 நடைமுறையை கருத்தில் கொண்டு,
தமிழ் சாதிகளில் எந்த சாதியும் இழிவானது இல்லை என்பதை ஏற்றுக் கொண்டு,
 சக தமிழ் குடிகளின் மீது பாசம் கொண்டு,
 அனைவரும் தமது குடி அடையாளத்துடன்,
 மத அடையாளத்துடன்,
 பிரதேச அடையாளத்துடன்,
 பாலின அடையாளத்துடன்,
தமது எந்த ஒரு அடையாளம் மறைப்பும் இல்லாமல்
 தமிழராக ஒன்று சேர்ந்து தமிழ் தேசியத்தை வெல்வோம்!

  இயல்பான இனப்பற்றுடன் இனத்திற்காக உழைக்க முன்வருபவனிடம் 
"நீ போய் ஜாதியை ஒழித்து விட்டு வா"
"மதத்தை ஒழித்து விட்டு வா"
"உன்னுடைய பழக்க வழக்கங்களை ஒழித்துவிட்டு வா"
"தூய தமிழில் பேசிக்கொண்டு வா"
"கருத்தியல் ரீதியில் தெளிந்து விட்டு வா"
என்று விரட்டி விடுவது இந்த இனத்தின் பெரிய கேடாக இருக்கிறது.

 அண்டை இனங்களிடம் நாம் பாடம் கற்க ஏராளம் உள்ளது.
 அண்டை இனங்கள் நம்மை விட பெரிய அளவில் சாதிய ஏற்றத்தாழ்வு  உள்ளவர்கள்.
அவர்கள் இன்று சாதிய அடையாளத்துடனே இனமாக திரண்டு தங்கள் தாய்நிலங்களில் தங்களது இன உரிமைகளையும் தத்தமது குடிக்கான உரிமைகளையும் மீட்டு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர்.
 இவர்களில் யாருமே அதிமேதாவிகள் அல்ல.
 இன்று நாம் தப்பி பிழைக்க வேண்டும் என்றால் இயல்பான இனப்பற்று இருக்கும் நமது மக்களை இயல்பான வழியில் ஒன்று திரட்டி கூட்டான முயற்சியின் மூலம் வேற்றின ஆதிக்கத்தைத் தடுத்து வாழ்ந்துகொள்ள முடியும்.

 தலைவர் பிரபாகரன் "ஒவ்வொரு தமிழனும் தமிழனாக தனது இயல்பான சிறிய பங்களிப்பை செய்து விட்டால் எனக்கு அவசியம் இருக்காது" என்று கூறியது போல நாம் செயல்பட வேண்டும்.

 தமிழர்கள் செயற்கையாக உருவாக்கப்பட்ட பழைய சாதிய பகை உணர்வை மறந்து இன்று ஒன்று திரண்டு வெற்றிப் பாதையை நோக்கி செல்லும் இதே 'குடி வழி தமிழ் தேசியத்தை' தொடர வேண்டும்!

 இதுவும் கூட எளிதானது அல்ல!
 தமிழ் சாதிகளில் ஒன்று ஓரணியில் திரண்ட போது கூட திராவிடம் பெருத்த சேதத்தை சந்தித்துள்ளது.
 ஆகவே ஒரு சாதி தனியாக திரண்டு விடக்கூடாது என்பதில் கூட வந்தேறிகள் கவனமாக இருக்கிறார்கள். 

 அண்ணன் சீமான் சொல்வது போல "கன்னியாகுமரியில் பெரும்பான்மையாக வாழும் நாடார் சாதியினரை இரண்டு மதங்களாக பிரித்துள்ளனர், அதற்கு அடுத்த திருநெல்வேலி மாவட்டத்தை மதமாக பிரிக்காமல் 3 ஜாதிகளாக பிரித்துள்ளனர்" 

 அப்படி ஒரே மதத்தில் ஒரே ஜாதியாக திரண்டு இருக்கின்ற தமிழர்களை கூட இவர்கள் மொழித் தேசியம் என்றும் இடதுசாரி வலது சாரி என்றும் பல்வேறு வகையில் பிரித்து கருத்தில் ரீதியில் குழப்புகின்றனர்.

  இன்று தமிழ்ச் சாதிகளில் பெரும்பான்மையான சாதிகளில் இளைஞர்கள் தமிழ் தேசியத்தின் பக்கம் கணிசமாக வந்துவிட்டனர்.
 பழைய வந்தேறி அரசுகளால் தாழ்த்தப்பட்ட சில சாதிகள் தமிழ் தேசியத்தின் பக்கம் வருவதற்கு தயங்கிக் கொண்டிருக்கின்றன.
 அவர்களை 'நாம் தாழ்ந்தவர்கள்' என்ற உளவியலில் இருந்து விடுபட்டு தமிழ்க் குடியாக தமிழர்களாக தமிழ் தேசியத்தில் இணைவதும் கூடிய சீக்கிரம் நடக்க இருக்கிறது.
 அப்படி தமிழ்தேசியத்தின் பக்கம் அத்தனை சாதி இளைஞர்களும் வந்துவிட்டாலே தமிழினம் பாதி வெற்றியை அடைந்து விட்ட தாக அர்த்தம்.

 ஒழிப்பதற்கு எத்தனையோ முயற்சி செய்தும் குளறுபடி செய்தும் தமிழினத்திடம் சாதிதான் எஞ்சி நிற்கிறது. கடைசி வாய்ப்பாக சாதியைப் பயன்படுத்தி இனத்தைக் காப்பாற்றுவோம்! 

 தமிழ் இனமே ஒரு சாதி!
இனத்திற்காக உழைப்பவர் உயர்ந்த சாதி!
தயங்கி நிற்பவர் தாழ்ந்த சாதி! 

 

No comments:

Post a Comment