Sunday 15 January 2023

எது சமத்துவ பொங்கல்

எது சமத்துவ பொங்கல்? 

சமத்துவ ரம்ஜான் கிடையாதாம்!
 சமத்துவ கிறிஸ்துமஸ் கிடையாதாம்!
 அவையெல்லாம் மதத்தின் விழா!  அதை அந்தந்த மதத்தினர்தான் கொண்டாட வேண்டும்!
 இனத்திற்கான விழா வேறு! அதை அந்த இனத்தினர் எவராயிருந்தாலும் கொண்டாடலாம்.
 நாட்டுக்கான விழாக்கள் உண்டு! அதை அந்நாட்டினர் அனைவரும் கொண்டாட வேண்டும்!

 பொங்கல் தமிழ் இனத்தின் விழா அதை எந்த மதத்தை சேர்ந்த தமிழரும் கொண்டாடலாம்.
 அப்படி பல மதத் தமிழர்கள் சேர்ந்து கொண்டாடினால் கூட அது சமத்துவ பொங்கல் ஆகாது!
 மலையாளி, கன்னடர், தெலுங்கர், சிங்களவர் என்று யாராவது தமிழர்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடினால் அதுதான் சமத்துவ பொங்கல்!

நம் தேசிய விழாவாகிய பொங்கல் உணவை இறைவனுக்கு படைக்கும் வழக்கம் கொண்டது இல்லை! சூரியனுக்குதான் படைக்கிறோம்! நாள், நட்சத்திரம், நேரம் பாத்து கொண்டாடுறது இல்லை!  எனவே இது இந்து பண்டிகை ஆகாது! 

 இந்தியா முழுவதும் இதே மாதத்தில் அறுவடை விழா கொண்டாடப்படுவதை வைத்து சிலர் இதற்கு இந்துத்துவ சாயம் பூசப் பார்க்கிறார்கள். 
இந்தியா முழுவதும் காலநிலை ஓரளவு ஒத்துப் போகிறது. விளைச்சல், அறுவடை போன்றவை ஒத்துப் போகிறது. அதனால் பழைய நாட்காட்டிப்படி மாதத்தின் முதல் நாள் விழா கொண்டாடப்படுகிறது.

 இந்தியா என்றில்லை உலகம் முழுக்க அறுவடை திருவிழா கொண்டாடப்படுகிறது! 
 உலகத்தில் அந்த அந்த மண், உணவு, காலநிலை பொறுத்து அவரவர் அறுவடை திருவிழா கொண்டாடப்படுகிறது!
 உலகப்பந்தில் அமெரிக்கா முதல் ஜப்பான் வரை தமக்கென அறுவடை திருநாள் வைத்துள்ளன.
 அந்தந்த இனத்தின் அறுவடை விழாவை அந்த அந்த இனத்தார் கொண்டாட வேண்டும்!

 பைபிள் கூட அறுவடை விழா பற்றி கூறுகிறது [ “Celebrate the Festival of Harvest with the firstfruits of the crops you sow in your field.
Exodus 23:16].

இசுலாத் பாலைவனத்தில் தோன்றியது! இருந்தாலும் மரங்கள் பழங்களைத் தரும் காலம் வரும்போது அதை அறுவடை செய்யும் முதல்நாளில் இறைவனுக்கான பங்கை படைக்கச் சொல்கிறது
 [Eat of their fruits when they come to fruition and pay His due on the day of harvesting
Quran 6:141].

 ஒரு இனத்தின் விழாவை மதத்தின் பெயரால் குழப்புவதையும் மத்ததின் காரணமாக வெறுப்பதையும் இனத்திற்கு செய்யும் துரோகமாகவே பார்க்க வேண்டும்.

 தமிழின கிறித்துவர் பரவாயில்லை ஆனால் இசுலாமியர் சிலரின் பார்வை இதில் தவறாக உள்ளது. பொங்கல் பானையை அலங்கரிப்பது மற்றும் கதிரவனுக்கு நன்றி செலுத்துவது ஆகியவற்றை இறைவனுக்கு இணை வைப்பது என்று கூறுகிறார்கள்.

 ஆசிரியர் வரும்போது எழுந்து நிற்கும் இசுலாமிய மாணவன், தாய் தந்தையிடம் ஆசீர்வாதம் வாங்கும் இசுலாமியர், உயரதிகாரிக்கு சல்யூட் வைக்கும் இசுலாமிய போலீஸ்காரர் இவர்களெல்லாம் என்ன மத துரோகியா?

 இறைவனை வழிபடுவது வேறு! மரியாதை கொடுப்பது அல்லது நன்றி தெரிவிப்பது வேறு! 

 பொங்கல் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விழா! இது எந்த மதத்திற்கும் எதிரானது இல்லை!
 அப்படி சந்தேகம் இருந்தால் பொங்கல் அன்று பிற தமிழர் போல பொங்கலிட்டு குரான் கூறுவது போல ஒரு பங்கை இறைவனுக்கே நன்றி கூறிப் படைக்கலாம். 

 தமிழர்கள் சாதி, மத, நாடு பேதங்களைக் கடந்து பொங்கல் கொண்டாடுவது இனக் கடமை!
 
 இதை இந்து மதப் பண்டிகை ஆக்குவதோ, இசுலாமிய மதத்திற்கு எதிராக சித்தரிப்பதோ, அல்லது புத்தாண்டு என்று குழப்புவதோ இனத் துரோகம் ஆகும்!

 தமிழர் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்து! 

 
 
 

No comments:

Post a Comment