கம்யூனிசம் என்றால்?
இங்கே பலரும் கம்யூனிசத்தை ஏதோ உயர்ந்த கொள்கை போல பேசுகிறார்கள்.
கம்யூனிசம் என்பது அடிப்படையில் முதலாளிகள் செய்யும் இயற்கை அழிவுகளைப் பற்றி கவலைப்படாமல்
அவர்களின் லாபத்தில் பங்கு கேட்கும் கொள்கையே ஆகும்.
ஐரோப்பாவில் 1800களுக்குப் பிறகு மனிதர்கள் மூலம் செய்யும் வேலையை இயந்திரங்கள் மூலம் செய்விக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.
தொழிலாளர்களின் முக்கியத்துவம் குறைந்து அவர்கள் நசுக்கப்பட்டனர்.
உற்பத்தி பல மடங்கு அதிகமாகிறது. இந்த தொழிற்சாலைகளுக்கு தீனி போடவே கடல்கடந்து நாடுகளைப் பிடித்து வளங்களை சுரண்டி கொண்டுவந்து
தொழிற்சாலையில் அதனை பயன்பாட்டுப் பொருளாக மாற்றி
மீண்டும் கடல்கடந்து அதே நாட்டில் கொண்டுபோய் விற்று
நன்கு கொழுத்தன ஐரோப்பிய நாடுகள்.
அப்போது ஐரோப்பாவின் காற்று நீர் நிலம் என எல்லாமே மாசடைந்து போனது.
இதில் ஏற்பட்ட போட்டியே உலகப்போருக்கு வழிவகுத்தது.
இந்த காலகட்டத்தில் உருவானதே கம்யூனிசம்.
அவர்கள் மாசடைந்த இயற்கைக்காகப் போராடவில்லை.
லாபத்தில் பங்கு கேட்டுத்தான் போராடினர்.
இதற்கு வெளிமுலாம் பூசவே பல்வேறு பிரச்சனைகளை உள்வாங்கி தொடர்புபடுத்தி 'உலகப் போராட்டம் அனைத்தும் வர்க்கப் போராட்டமே' என்று ஒற்றைவரியில் முடித்தனர்.
பேராசான் மார்க்ஸ் கூறிய முதன்மை முழக்கம் 'உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்பது இல்லை,
'உலக நாடுகளின் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்பதே.
அதாவது தொழிலாளர்களுக்குள் சாதி மத பேதமெல்லாம் கிடையாது.
ஆனால் நாடு என்னும் வேறுபாடு உள்ளது என மார்க்ஸ் கூறுகிறார்.
நாடு என்பதற்கு பொதுவான மொழி பொதுவான உணர்ச்சி கொண்ட மக்கள் தனிநாடாக இருக்கவேண்டும் என வரையறை செய்கிறார் மார்க்ஸ்.
இங்கே சுரண்டலை எதிர்த்து போராடும் கம்யூனிஸ்டுகளை நான்,
தாங்கள் சுரண்ட வைத்துள்ளதை வேறொருவன் சுரண்டுவதை எதிர்ப்பதாகவே பார்க்கிறேன்.
ஆக கம்யூனிசம் தமிழர்களுக்கான தீர்வு அல்ல என்பது என் கருத்து.
Tuesday, 22 November 2016
கம்யூனிசம் என்றால்?
Sunday, 4 October 2015
கோழையே சுடு
கோழையே சுடு
----------------------------
1967 அக்டோபர் 8, மாலை மூன்றரை மணிக்கு பொலிவிய சேனையால் சே தமது 22 தோழர்களுடன் சுற்றிவளைக்கப்படுகிறார்.
சே காலில் குண்டு பாய்ந்திருந்தது சகதோழர் தூக்கிக்கொண்டு ஓடமுயன்றார் ஆனால் முடியவில்லை.
துப்பாக்கியை எடுக்கமுயன்ற சேவின் கை சுடப்பட்டது. குவப்ராடா டெல் யூரோ என்ற ஆற்றின்கரையில் இது நடந்தது
(இப்போது அது நினைவிடம்).
கை கால்கள் கட்டப்பட்டு தூக்கிச்செல்லப்படுகிறார் சே.
ஒரு பள்ளிக்கூடத்தின் தனி அறையில் அவர் கிடத்தப்பட்டார்.
சேவை என்ன செய்வது விசாரணைக்கு உட்படுத்தினால் உலகம் உற்றுப்பார்க்கும்.
பேசாமல் கொன்றுவிடலாம் மோதலில் இறந்ததாக அறிவித்துவிடலாம் கூடியிருந்த சி.ஐ.ஏ உளவாளிகளான கியூப நாட்டு இனத்துரோகிகள், பொலிவிய சேனைத் தளபதிகள், அமெரிக்க-பொலிவிய அரசை கலந்தாலோசித்து முடிவுக்கு வந்தனர்.
1967 செப்டம்பர் 9, காலை பத்துமணி சார்ஜண்ட்.டெர்ரன் என்பவரிடம் சேவை கொல்லும் பணி கொடுக்கப்படுகிறது.
அந்த அழுக்கான அறையில் அவர் நுழைந்தார்.
கிழிந்த அழுக்கான ஆடைகள், பல நாள் பட்டினியால் எலும்பும் தோலுமாக, காலில் பிய்ந்துபோன சப்பாத்துகளை அணிந்த எழக்கூட முடியாமல் கிடக்கிறாரே இவரா உலகவல்லரசுகள் நடுங்கும் சே?!
இவரா அர்ஜண்டினாவில் மருத்துவர் பட்டம் பெற்ற செல்வச்சீமான்?!
இவரா வெறும் 300போராளிகளை வைத்துக்கொண்டு விமானம் மற்றும் தாங்கி(tank)களுடன் நின்ற 7,000 படையினரைத் தோற்கடித்து ஹவானாவைக் கைப்பற்றிய மாவீரர்?!
இவரா க்யூபாவின் ரூபாய் நோட்டுகளில் கையெழுத்துப் போட்ட நிதித்தலைவர்?!
இவரா ஐ.நா சபையில் உரையாற்றிய மனிதர்?!
இவர்தானா சொற்பமான போராளிகளுடன் பதினோரு மாதங்கள் பொலிவியாவைக் கதறவைத்த கரந்தடிப் போராளி?!
நம்பமுடியவில்லை.
சே அந்தநிலையிலும் எழ முயன்றார்.
டெர்ரன் நடுங்கிப்போய் திரும்பிவிட்டார்.
பிறகு மேலாளர்களின் கண்டிப்பான உத்தரவுக்கு பணிந்து நிலைமறக்கும் அளவு குடித்துவிட்டு மறுபடி போனார்.
துப்பாக்கியை நீட்டினார்.
"கோழையே சுடு, நீ சுடுவது தனிமனிதனைத்தான்"
சேவின் குரல் ஒலித்த மறுநொடி கண்களை இறுக்க மூடி முகத்தை வேறுபக்கம் திருப்பியவாறு படபடவென்று சுட்டுவிட்டான்.
ஆம் சே மரணத்தை வென்றுவிட்டார்.
மாந்த உடலில் அடைபட்டிருந்த சே உலகம் முழுவதும் நிறைந்துவிட்டார்.