Saturday 10 July 2021

கல்வெட்டுகளில் பறையர் மற்றும் பள்ளர்

கல்வெட்டுகளில் பறையர் மற்றும் பள்ளர்

பிப்ரவரி 2005 இல் வெளிவந்த "புதுவிசை" கலாச்சார மாத இதழில் பேரா. ஆ. சிவசுப்ரமணியன்  அவர்கள் எழுதிய "மழைச் செம்புச் சடங்கும் மூதேவி வழிபாடும்" கட்டுரையின் வரிகள்.

// குடியிருப்பு என்ற பொருளிலேயே சேரி என்ற சொல் சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பார்ப்பனச்சேரி என்ற சொல்லாட்சி சங்க காலத்தில் வழக்கில் இருந்துள்ளது. சோழர் கால கல்வெட்டுக்களிலும் குடியிருப்பு என்ற பொருளிலேயே சேரிஎன்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.//

// தீண்டாச்சேரியும் பறைச்சேரியும் என்று சோழர்காலக் கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது (தெ.இ.க.II;4). //

// பறைச்சேரி (தெ.இ.க;4, க.எ.529;52,81,83) (தெ.இ.க;26, க.எ.686) மேலைப்பறைச்சேரி (தெ.இ.க. தொகுதி2, க.எ.5) என்று வரும் வரிகள் இதற்குச் சான்றாகும். //

//மேலும் நிலங்கள் பறைத்துடவை (தெ.இ.க. 26, க.எ.686) பள்ளன் விருத்தி (தெ.இ.க.8 க.எ.151) என்றும் சுடுகாடு பறைச்சுடுகாடு (தெ.இ.க.4, க.எ.529, 68, 79, 83, தெ.இ. க. உ.தொகுதி 1,2, க.எ. 5) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.//

// குதிரைகளுக்கு புல்லிடும் பணியை பறையர்களில் ஒரு பிரிவினர் மேற்கொண்டிருந்தனர். 'குதிரைக்கிப் புல்லிடும் பறையர்' என்று சோழர்காலக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.//

// உழுதொழிலை மேற்கொண்டு வாழ்ந்த பறையர்கள் உழப்பறையர் என்று அழைக்கப்பட்டனர். இதனால் பறையர்கள் வெவ்வேறானதொழில்களில் ஈடுபட்டிருந்தமையும் உழுதொழிலில் ஈடுபட்டவர்கள் மட்டுமே உழப்பறையர் என்று அழைக்கப்பட்டனர் என்பதும் புலனாகிறது.//

// பொய்யாத் தமிழ்நம்பி என்ற பறையர் பூசகராகப் பணிபுரிந்துள்ளார். (தெ.இ.க.26, க.எ.253) //

// பாண்டியமன்னனின் மெய்க்காப்பாளராகப் பறையர் ஒருவர் பணியாற்றியமையை 'அரையன் அணுக்க கூவன் பறையனேன்' என்ற கல்வெட்டு வரிஉணர்த்துகிறது (தெ.இ.க. 14; க.எ. 56). //

// உமையாள்வான் என்ற பெண் 13ம் நூற்றாண்டின் இறுதியில் செங்கல்பட்டு மாவட்டம் கூவம் கிராமத்தின் 'திருவிற்கோலமுடைய நாயனார்' கோவிலுக்கு சக்தி விளக்குஎரிப்பதற்கு கொடை வழங்கியுள்ளார். அதை பெற்றுக் கொண்ட மூவரில் முதலாமவர் 'வைத்தான் பள்ளன்' என்றும், கல்வெட்டின் இறுதியில் 'இவை பள்ளன் எழுத்து' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. //

//வரி கட்டமுடியாத நிலையில் ஒல்லையூர் மறவர்கள் மதுராந்தகம் என்ற குடிகாடை விற்று வரி செலுத்தியுள்ளனர். இவ்விற்பனைதொடர்பான கல்வெட்டில் 'அஞ்சாத கண்டப்பறையின் நெடும்பறி கால்' என்று ஒரு கால்வாய் குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டியர் காலகல்வெட்டொன்றில் (IPS 309) இச்செய்தி இடம்பெற்றுள்ளது. இக்கல்வெட்டில் பறையர் சிலர் கையொப்பமிட்டுள்ளனர்.//

// ஜடாவர்மன்சுந்தரபாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டுக் காலத்திய கல்வெட்டொன்றில், துக்கைப்பட்டன், சொக்கப்பட்டன் என்ற சிவபிராமணர்கள் கையெழுத்திடத் தெரியாத நிலையில் தற்குறி இட்டுள்ளனர். ஆனால் இதே கல்வெட்டில் அரசர் மிகா பறையர், கானாட்டுப்பறையன் என்பவர்கள் கையெழுத்திட்டுள்ளனர் (IPS 421). //

// மாறவர்மன் குலசேகர பாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டில் புதுக்கோட்டை மாவட்டம் திருமய்யம் வட்டத்திலுள்ள விரையாச்சிலைஎன்ற ஊரில் பனையன்குன்று என்ற நீர்நிலை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்விற்பனை தொடர்பான ஆவணத்தில் பெரியநாட்டுப்பறையன், கானாட்டுப் பறையன், ஐநூற்றுப் பறையன், அரசர் மிகா பறையன், அகலிங்கப் பறையன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர் (IPS 535) //

// மாறவர்மன் குலசேகரன் என்ற பாண்டி மன்னனின் ஆட்சிக்காலத்தில் நீர்க்குட்டை ஒன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது. இக்கல்வெட்டைஆராய்ந்த ஆர்.திருமலை (1981:28) பெரும்பாலான மறவர்களும் குறுநில மன்னர்களின் வழித்தோன்றல்களும் கூட கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்க பறையர்களும் கைவினைஞர்களும் கையெழுத்திட்டுள்ளனர் என்று அவதானித்துள்ளார்.//

// அரண்மனைக்குக் காணிக்கைப் பணமாக மக்கள் செலுத்தவேண்டிய வரி வாசல் காணிக்கை எனப்பட்டது. இவ்வரியிலிருந்து பள்ளர்களுக்கு விலக்களிக்கப்பட்டதை பள்ளக்குடிக்கு வாசல் பணம்மானியமாகவும் (தெ.இ.க. 26, க.எ.336) என்ற கல்வெட்டு வரி தெரிவிக்கின்றது.//

// தஞ்சை பெருவுடையார் கோவிலில் விளக்கெரிக்க ஆடுகளைத் தானம் வழங்கியதைக் குறிப்பிடும் நீண்ட கல்வெட்டொன்று உள்ளது. இவ்வாறு தானம் வழங்கியவர்களுள் ஓலோக மாறாயன், பள்ளன், கூத்தன், பள்ளன் கிழான், முகத்தி எழுவன் என்ற பள்ளர்களும் அடக்கம் (தெ.இ.க.II பகுதி 4:95 வரி 75,76).//

// திருமானிக்குழி ஆளுடையார் கோவில் பெரிய நாச்சியாருக்கு நந்தா விளக்கேற்ற 'ஊர்ப்பறையன் மண்டை கோமான்' என்பவர் பால் எருமை ஒன்றை அதன் கன்றுடன் 'குலோத்துங்க சோழக்கோன் என்ற மன்றாடியிடம்' வழங்கியதை மூன்றாம் ராஜராஜனின் ஐந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று (தெ.இ.க. 7,க.எ.794) குறிப்பிடுகிறது.//

// விக்கிரம சோழ தேவன் காலத்திய (1292-93) கல்வெட்டொன்றில், 'வெள்ளாட்டி பூசகரான பறையன் ஆளுடை நாச்சி' என்பவரும் அவருடைய சிறிய தாயாரும் சேர்ந்து உடுமலைப்பேட்டை வட்டம் சோழமாதேவி நல்லூர் ஊரிலுள்ள குலசேகர சுவாமி கோவில் மண்டபத்திற்கு திருநிலைக்கால் இரண்டும் படியிரண்டும் செய்வித்துள்ளார் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது (தெ.இ.க. 26,க.எ. 253).//

// போர்க்களத்தில் இரத்தம் சிந்தி உயிர் நீத்த வீரர்களைப் போற்றும் வகையில் அவர்களது குடும்பத்தாருக்கு வழங்கப்படும் நிலம் உதிரப்பட்டி அல்லது இரத்தக்காணிக்கை எனப்படும். ஊரின் நன்மைக்காக வேறு வகையில் உயிர் துறந்தவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும் நிலமும் உதிரப்பட்டி என்றே பெயர் பெற்றது. திருமய்யம் வட்டம் தேவமலைக் குடபோகக் கோவிலுக்கு இடதுபுறம் பாறையில் உள்ள கல்வெட்டு 'மலையாலங்குடி ஊர் பெரியான் பேரையூர் பறையன்' மகள் நாடியாருக்கு உதிரப்பட்டியாக மூன்று மா நிலம் வழங்கியதைக் குறிப்பிடுகிறது. வெள்ளம் பெருக்கெடுத்தநேரத்தில் குளத்தை அடைக்கும் பணியில் பெருந்தேவப் பள்ளர் என்பவர் இறந்துபோக, அவரது மகளுக்கு உதிரப்பட்டியாக நிலம் வழங்கப்பட்டது. இச்செய்தியைக் குறிக்கும் கல்வெட்டு வருமாறு:
குலைசேகர தேவ
ர்க்கு யாண்ட34வ
துக் கருங்குளர்த்திக்
கு ஒரு பழி உண்திடான படியாலே
இப்பழிக்கு இவ்வூர்
குடும்பரில் பெரிய
தேவப் பள்ளன் அணை
வெட்டிப் போகையா
லே இவன் மகளுக்கு
ஊரார்களிட்ட உதி
ரப்பட்டி குடுத்தபடி தபான
வ நிலம் அரை மா அணை
நிலம்......//

// விக்கிரமச் சோழன் காலத்தியக் கல்வெட்டொன்றில் 'வெள்ளான் மாப்புள்ளிகளில் சோழன் பறையனான தனபாலன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வேளாண்மைத் தொழில் செய்து வந்த பறையர்கள் வெள்ளாளன் என்று அடைமொழியிட்டு அழைக்கப்பட்டனர் என்பதை இக்கல்வெட்டு வெளிப்படுத்துகிறது (SII ங:253).//

// புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள 'காரையூர் திருமாங்கனி ஈஸ்வரர்' கோவிலில் உள்ள கல்வெட்டொன்று ஊரைப்பாதுகாக்கும் பணியில் பறையர் ஒருவர் நியமிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது. ஆதனமழகியான் என்பவருக்கு 'காரையூர்ப் பறையன்' என்றுபட்டம் கட்டி பாதுகாவல் உரிமையை ஊரார் வழங்கியுள்ளனர். இதற்காக அவரிடமிருந்து நூற்றுப் பத்துப் பணம் பெற்றுள்ளனர். இக்காவல்பணிக்காக இடையர்கள் நெய்யும், வலையர் முயலும், பள்ளர் பறையர் கோழியும் அவருக்கு வழங்கவேண்டுமென்று ஊரவர்கள் முடிவுசெய்துள்ளனர் (IPS 843) //

// திருமயம் வட்டம் தேக்காட்டூர் தருமசமர்த்தினி அம்மன் கோவிலிலுள்ள கல்வெட்டொன்று அவ்வூர் பறையர்கள் களஞ்செதுக்கி வந்ததாகவும், பின்னர் களஞ்செதுக்க மாட்டோம் என்று அறிவித்ததாகவும் குறிப்பிடுகிறது. ஊரவர்கள் பறையர்களின் அறிவிப்பை ஏற்றுக்கொண்டதுடன் ஊரிலேயே குடியிருந்துகொண்டு முன்னர் பெற்று வந்த சுதந்திரத்தை அவர்கள் பெற்று வர அனுமதித்ததையும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. (IPS 948)//

// திருமயம் வட்டம் மேலப்பனையூர் ஞானபுரீஸ்வரர் கோவில் மண்டபத்திலுள்ள கல்வெட்டு, மறவருக்கும் பறையருக்கும் இடையிலான உடன்படிக்கையைக் குறிப்பிடுகிறது. "நம்மில் வினைவிரோதங்களும் வந்து இரண்டு வகையிலும் அழிவில் இருக்கையிலே" என்று கல்வெட்டு குறிப்பிடுவதால் பறையர்கள் மறவர்களை எதிர்த்து நின்றுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
"செம்மயிர்யிட்டும் பாடிக்கொண்டும் பறையர் வரலாம்" என்று இவ்வுடன்படிக்கை குறிப்பிடுவதால் பண்பாட்டு அடையாளம் தொடர்பாக மறவருக்கும் பறையருக்குமிடையே மோதல்கள் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதலாம் (IPS 828).//

// திருமயம் வட்டம் மேலத்தானையம் மாரியம்மன் கோவிலுக்கு முன்பாக இருக்கும் கல்தூணில் பொறிக்கப்பட்ட கல்வெட்டொன்று 'வீரசின்னு நாயக்கர்' என்ற குறுநில மன்னன் காலத்தில் விருதுகள் தொடர்பாக பள்ளருக்கும் பறையருக்கும் இடையே நிகழ்ந்த பூசலைத்தெரிவிக்கிறது. வெள்ளானை, வாழை, கரும்பு ஆகிய விருதுகள் தங்களுக்கு மட்டுமே உரியதென்றும் பறையர்களுக்கு இல்லையென்றும் கூறி, கொதிக்கும் நெய்யில் பள்ளர் கைமுக்கினராம். அவர்கள் கை சுடாமையால் இவ்விருதுகள் பள்ளருக்கு மட்டுமே உரியதென்று தீர்ப்பு வழங்கப்பட்டதாக இக்கல்வெட்டு தெரிவிக்கிறது (IPS 929).//

// மேளமடிப்பது தொடர்பாக பள்ளர், பறையர் என்ற இருவகுப்பினருக்கும் இடையே நடந்த பிணக்கில் உடன்பாடு ஏற்பட்டதாக திருமயம் வட்டம் பேரையூர் நாகநாத சுவாமி கோவில் கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது (IPS 976).//

// திருமலை நாயக்கர் காலத்தில், குடும்பர் சாதியினருக்கு "திருமலைக் குடும்பர்" என்ற பட்டம் வழங்கப்பட்டதன் பின்புலத்தை ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. திருவில்லிப்புத்தூரில் தேவேந்திரக் குடும்பருக்கும் பறையருக்கும் ஏற்பட்ட பூசலை ஒட்டியே இப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இச்செய்தியைக் குறிப்பிடும் கல்வெட்டில் தேவேந்திரக் குடும்பர் தோற்றம் குறித்த புராணக்கதை ஒன்று இடம்பெற்றுள்ளது. அதாவது "பழங்காலத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. பாண்டிய மன்னன் ஒருவன் தேவேந்திரனுடன் சமமாக அமர்ந்து நான்கு தேவ கன்னியரையும் கரும்புக்கணுக்களையும், வாழைக்கன்றுகளையும் ஒரு பனங்கொட்டையையும் பல வகையான நெல்வித்துக்களையும், காளை ஒன்றையும் தேவலோகத்திலிருந்து கொண்டு வந்தான். இக்கடும் பஞ்சகாலத்தில் பனிரெண்டாயிரம்கிணறுகளை ஒரே நாளில் தோண்டி பாசன வசதியை, தேவேந்திரக் குடும்பன் உருவாக்கினான். இப்பணியை மதித்து தேவேந்திரக்குடும்பனுக்கு சில சலுகைகளை வழங்கினர். இதன்படி வெள்ளை யானை, தீவட்டி, நடைபாவாடை, இரட்டைச் சிலம்பு, இரண்டு கொடுக்கு, பதினாறு கால் பந்தல், இறப்பில் மூன்றடுக்குத் தேர் பயன்படுத்தல், பஞ்சவன் என்ற பட்டம், பதினெட்டு வகை இசைக்கருவிகள், கனகதப்பு ஆகியன தேவேந்திரக் குடும்பருக்கு உரியன. இவை தமக்கும் உரியன என்று கூறி பறையர்கள் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கினர்.வாகைக்குளத்தைச் சேர்ந்த குட்டி குடும்பனும் மலையன்குளத்தைச் சேர்ந்த அல்லகாரக் குடும்பனும் மன்னனைச் சந்தித்துப் பறையர்களின் இச்செயல் குறித்து முறையிட்டனர். முன்னர் வெளியான செப்புப்பட்டயங்களின் அடிப்படையில் திருவிழாக்களில் மூன்றுகால் பந்தல் இடுவதும், ஒரு கொடுக்கு, ஒரு சாம்பு, ஒரு மப்பு, ஒரு தீப்பந்தம், மாடியில்லா வீடு ஆகியன பறையருக்குரியன என்று முடிவுசெய்யப்பட்டது. அத்துடன் குடும்பர்களுக்கு திருமலைக் குடும்பன் என்ற பட்டமும் வரிவிலக்கு அளிக்கப்பட்ட இரண்டு கோட்டை நெல்பயிரிடும் பரப்புள்ள நிலமும் வழங்கப்பட்டன (ARE 1926 பக்.119-120).//

// சோழ சேர்வைக்காரன், அவன் மனைவி கொண்பொடிக்காரி ஆகியோருக்கு புல்லாங்குடியிலுள்ள பெரியகூத்தன், சின்னக்கூத்தன், ராக்கக்குடும்பன் ஆகிய மூவரும் தங்கள் ஊரிலுள்ள அம்பலத்தை விற்றுவிடும்படி ரகுநாத சேதுபதி ஆணையிட்டார். இதன்படி ஐம்பது பணத்திற்கு மூவரும் அம்பலத்தை விற்றனர். மேலும் அங்கு புதிதாய் கண்மாய் வெட்ட நூறு பணம் வழங்கப்பட்டது. அங்கு புதிதாகக் குடியேறும் கைக்கோளக்குடி மூன்றுக்கு ஐந்து பணம் வீதம் பதினைந்து பணமும், புதிதாய் குடியேறிய பள்ளர்குடி ஒன்றுக்கு மூன்று பணமும் ஆக நூற்றியெண்பது பணம் மூவரிடமும் வழங்கப்பட்டது. இந்த  17ம் நூற்றாண்டு செப்பேடு (21-5-1696) பின்வரும் மூன்று செய்திகளை நமக்குஉணர்த்துகிறது.
1. புதிய ஊர்களை வேளாண்மை செய்ய ஏற்கனவே இருந்த தங்கள் உடைமையான அம்பலத்தை விற்கும்படி குடும்பர்கள் மூவருக்கும் சேதுபதி மன்னன் கட்டளையிட்டுள்ளார்.
2. புதிய ஊரில் வேளாண்மை செய்ய உழவர்களான பள்ளர்களும் கைவினைத் தொழில் செய்ய கம்மாளர்களும் குடியேற்றப்பட்டுள்ளனர்.
3. கம்மாளர்களுக்கு வழங்கியதை விட குறைவான பணமே பள்ளர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் இவர்கள் நிலத்துடன் கொடையாக வழங்கப்பட்டுள்ளனர். அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை சேதுபதி செப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.
பள்ளுப்பறை சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994; 208)
பள்ளுப்பறை இறை, வரி ,ஊழியம்.... ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242)
பள்ளுப்பறை... சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451)
பள்ளுப்பறை சகலமும் ஆண்டு கொள்வது (மேலது, 528) //

குறிப்புகள்:-
தெ.இ.க.: தென் இந்திய கல்வெட்டு
க.எ.: கல்வெட்டு எண்
IPS: Inscripts of Pudukkottai State

-----------------------------------
இப்பதிவின் அடிப்படையில் எனக்குத் தோன்றுவது என்னவென்றால் பறையர் மற்றும் பள்ளர் ஆகிய குடியினர் சோழர், பாண்டியர் ஆட்சிக் காலத்தில் சமூகத்தில் நல்ல நிலையில் இருந்துள்ளனர்.

நாயக்கர், சேதுபதி ஆட்சிக் காலத்தில் இவர்கள் நிலை சிறிது தாழ்ந்து பள்ளர் பறையர்களுக்கு இடையேயான பூசல்களும் தோன்றியுள்ளன.

நாயக்கர் காலப் பள்ளு இலக்கியங்கள் பள்ளர்களின் விளைச்சல் வரி என்கிற பெயரில் அளவுக்கதிகமாக சுரண்டப்பட்டு கடைசியில் நிலத்தை விற்று அத்தோடு அடிமையாகப் போன வரலாற்றைப் பதிவு செய்துள்ளன.

ஆனால் சேதுபதி ஆவணங்களில் வரும் பள்ளுபறை என்கிற சொல் நிலத்தோடு அடிமைகளாக விற்கப்பட்ட பள்ளர் மற்றும் பறையர்களைக் குறிக்கிறதா என்பதும் ஆராயப்பட வேண்டும். ஏனென்றால் நிலத்தை விற்றவர்களில் குடும்ப பள்ளர்கள் உள்ளனர். குடியேறியவர்களிலும் பள்ளர்கள் உள்ளனர்.  பறை என்பதற்கு அளக்கும் கருவி என்றும் பொருளுண்டு. விளைச்சலுக்கு இத்தனை பறை என்கிற வகையில் வரி கட்டியதால் பள்ளுபறை என்பது விவசாய வரி என்கிற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு அதிகம்.

- ஆதிபேரொளி
---------------------------

No comments:

Post a Comment