Showing posts with label கம்மவார். Show all posts
Showing posts with label கம்மவார். Show all posts

Monday, 25 September 2017

கொங்கு மண்டலத்தில் (தெலுங்கு) கம்மா குடியேற்றம்

கொங்கு மண்டலத்தில் (தெலுங்கு) கம்மா குடியேற்றம்


ஆந்திராவில் 600 ஆண்டுகள் முன்பு பஞ்சம் வந்தபோது சந்திரிகிரி (வரைபடத்தில் 1) பகுதியில் இருந்து தமிழகத்தில் குடியேறிய கம்மவார் பற்றி தற்போது பார்ப்போம்.


(இதற்கு முன்பே டெல்லி சுல்தானிய படையெடுப்பின் போது தெலுங்கர்கள் மிகச்சிறிய அளவில் தமிழகத்திற்குள் குடியேறியுள்ளனர்)


கம்மவார் சாதி தோன்றிய வரலாறு என பல ஆன்மீக கட்டுக்கதைகள் கூறப்படுகின்றன மகாலட்சுமியின் கம்மலில் இருந்து தோன்றினர் என்றவாறு, எனவே அதை விட்டுவிடுவோம்.

 இவர்கள் கரிசல்காட்டில் விவசாயம் செய்யும் குடிகள் ஆவர். 


இவர்கள் தமிழகத்தில் குடியேறும்போது நடந்ததாக ஒரு கதை உள்ளது.

இவர்கள் ஆந்திராவில் பஞ்சம் ஏற்பட்டபோது தமது குலதெய்வமான ரேணுகாதேவியை வணங்கினார்களாம்.

உடனே அந்த தெய்வம் கொங்குநாட்டின் சென்னிமலை ஆண்டவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி செழிப்பான பகுதியான கொங்கு பகுதியில் குடியேற அருள் வழங்கியதாம்.


உடனே அவர்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கொண்டம நாயுடு என்பவர் தலைமையில் கொங்கு பகுதிக்கு வந்தனராம்.


அப்போது சென்னிமலை முதல் உப்பாறு வரை அறுபது மைல் பரப்புள்ள நிலத்திற்கு உரிமையாளர் காணியாள கந்தசாமிக் கவுண்டர் எனும் பெரும் நிலக்கிழார்.

அவர் 12 கிராமங்களுக்கு அதிகாரி. 


ஒரு பண்டாரம் போல மாறுவேடத்தில் சென்னிமலை நாதன் கம்மவார்களை சந்தித்து அழைத்து வந்து கந்தசாமிக் கவுண்டரிடம் ஒப்படைத்துவிட்டு மறைந்துவிட்டாராம்.

வந்தது சென்னிமலை ஆண்டவன் என்று பரவசமடைந்த கந்தசாமி கவுண்டர் உப்பாற்றங்கரையில் மூன்று காத தூரம்வரை இருந்த பகுதியை பட்டயம் எழுதிக் கொடுத்தாராம்.


இலவசமாக வாங்காமல் கம்மவார்கள் தம்மால் முடிந்த சிறுதொகையாக நூறு வராகன் கொடுத்தனராம்.


கம்மவார்கள் அங்கே கூடாரம் அமைத்து குடியேறினர்.

இது கம்மவார் பட்டி என்று பெயர்பெற்றது.

தற்போது கம்பிளியம்பட்டி (2) என்றழைக்கப்படுகிறது.


அதன்பிறகு சூலூர் (3), கரடிவாவி (4) போன்ற இடங்களில் குடியேற்றங்களை அமைத்தனர்.


பிறகு தெலுங்கர் படையெடுப்பு தமிழகத்தின் மீது நடக்கிறது.

நாயக்கர் ஆட்சி தமிழகத்தில் பரவுகிறது.

கம்மா உட்பட தமிழகத் தெலுங்கர் வாழ்வில் வசந்தம் வீசத் தொடங்குகிறது.


 குமார கம்பணன் காலத்தில் மதுரை, திருச்சி ஜில்லாக்களில் பாளையங்கள் ஏற்படுத்தி தெலுங்கர் ஆளத்தொடங்கினர்.


நாயக்கர் ஆட்சி ஏற்கனவே இருந்த ஆட்சிமுறையை ஒழித்து நிலத்தை பாளையங்களாகப் பிரித்து ஆண்டது.

கொங்கு முழுவதும் காகவாடி, காடையூர், மஞ்சாபுரம், சமத்தூர், ஊத்துக்குளி, நிமந்தம்பட்டி, தாரமங்கலம், புரவிபாளையம், தொப்பம்பட்டி, மரக்கூர், செவ்வூர், பழைய கோட்டை, அவ்வம்பட்டி, சமச்சுவாடி, சொதம்பட்டி, துங்காவி ஆகிய பாளையங்கள் தோன்றின.

இவற்றில் பெரும்பான்மை தெலுங்கர் வசம் இருந்த பாளையங்கள்.


தமிழகத்தின் நாயக்கர் ஆட்சி ஆந்திராவில் நிலவிய ஆட்சியை விட தெலுங்கு மக்களுக்கு அதிக வாய்ப்பும் வளங்களும் அள்ளித்தந்ததால் தெலுங்கர் ஆயிரக்கணக்கில் தமிழகத்தில் குடியேறினர்.


கி.பி.1510 ல் கம்மவார் தமக்கென ஒரு நகரத்தை கட்டிக்கொண்டனர்.

தமது இனத்தின் மன்னனான கிருஷ்ணதேவராயர் நினைவாக கிருஷ்ணதேவராயபுரம் அல்லது ராயகிருஷ்ணபுரம் (5) என்று  பெயரிட்டனர்.

(கிருஷ்ணதேவராயர் காலம் கம்மவார் வரலாற்றில் பொற்காலமாகும்).

இது 1660 வாக்கில் பெருமழையால் ஏற்பட்ட மண்சரிவு வந்து கொட்டிய மணலால் நிறைந்து அழிந்துவிட்டது.


இந்த நகரத்தில் இருந்தோர் இடம்பெயர்ந்து பாப்பநாயக்கன் பாளையம்(6)

பீளமேடு அல்லது பூளமேடு (7)

சற்று தொலைவில் வேலூர் மாவட்டத்தில் ஆவாரம்பாளையம் (8)  எனும் ஊர்களை  அமைத்து குடியேறிக்கொண்டனர்.


1529ல் மதுரை நாயக்கராக பொறுப்பேற்ற விசுவநாத நாயக்கர் காலத்தில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திருநெல்வேலி,மதுரை, ராமநாதபுரம், திருச்சி, கோவை, சேலம் ஆகிய பகுதிகள் இவரது ஆட்சியில் இருந்தது.

இவரது காலத்தில் குறிப்பிடும்படியான குடியேற்றம் நடந்துள்ளது.

கம்மவார் மட்டுமல்லாது கவரா, கம்பளத்தார், சோணியர், ஒட்டர், சக்கிலியர், தொம்பர், ஆகிய தெலுங்கு சாதிகளும் தமிழகத்தில் குடிபுகுந்தனர்.

முக்கியமாக தெலுங்கு பிராமணர்கள் கணிசமான அளவு இந்த காலகட்டத்தில் குடிவந்தனர். 


விசுவநாத நாயக்கர் காலத்தில் 

கோவிந்த நாயக்கன் பாளையம், நரசிம்ம நாயக்கன் பாளையம், மொண்டி பாளையம், சித்தநாயக்கன் பாளையம் 

என்று தமது ஊர்த்தலைவர்கள் பெயரில் தெலுங்கர்கள் குடியேற்றங்களை அமைத்தனர்.


இதற்கடுத்த கம்மவர்களின் குறிப்பிடும்படியான குடியேற்றம் 1700களில் சந்திரகிரியிலிருந்தும் 400 கி.மீ வடக்கே குண்டூர் ஜில்லாவில் உள்ள ராசகொண்டலு (9) பகுதியில் இருந்து பாப்பநாயக்கன் பாளையத்திற்கு கம்மவார் பெருமளவு குடியேறியது ஆகும்.


மைசூர் படையெடுப்பு நாயக்கர் ஆட்சி மீது நடந்தது.

இதனால் கம்மா மக்கள் பலர் தென் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்தனர்.


(மைசூர் படை மதுரைக்கு அருகே வரை வந்துவிட்டது.

திருமலை நாயக்கர் 71 வயதில் படுத்த படுக்கையாக இருந்தார்.

ஆனாலும் சேதுநாட்டை அப்போது ஆண்ட ரகுநாத சேதுபதியிடம் அவர் உதவிகேட்டு மறவர் படையை பெற்று போரை நடத்தினார்.

மைசூர் படையை தொடங்கிய இடத்திற்கே பின்வாங்கச் செய்தார்.

தெலுங்கருக்கும் கன்னடருக்கும் நடந்த இப்போரில் இருதரப்பினரும் தோற்றவர் மூக்கை மேல் உதடுவரை அறுத்து கொடூரமாக சண்டை போட்டனர்.

பிறகு திருமலை நாயக்கர் கொங்கு பகுதியில் தெலுங்கரை மீண்டும் குடியமர்த்தி பொட்டதிக்கா பாளையம், பெரியநாயக்கன் பாளையம் ஆகிய இடங்களில் கோவிலும் கட்டிக்கொடுத்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் தெற்கே விருதுநகர், திருநெல்வேலி பகுதிகளில் குடியேறிய கம்மவார் தமது உண்மையான பட்டமான நாயுடு என்பதுடன் சில இடங்களில் நாயக்கர் என்றும் பட்டத்தையும் பயன்படுத்துகின்றனர்.

மற்றபடி நாயுடு என்றாலே கம்மா சாதியினரைத்தான் குறிக்கும்)


நாயக்கர் ஆட்சியில் மேலும் நாகமநாயக்கன் பட்டி, பாப்பநாயக்கன் பட்டி, அல்லமநாயக்கன் பட்டி, ரெட்டியப்பட்டி, இடையர் தர்மம், சேடப்பட்டி, அய்யம்பாளையம் போன்ற பல தெலுங்கு குடியேற்றங்கள் தமிழகம் முழுவதும் தோன்றின.


முதலில் அகதியாக 

பிறகு நிரந்தர குடிகளாக 

பிறகு பாளையக்காரர்களாக 

பிறகு நிலவுடைமைச் சமூகமாக

பிறகு ஆதிக்க வர்க்கமாக என தமிழகத் தெலுங்கரின் வளர்ச்சி பிரம்மாண்டமானது.


 இவர்களின் ஒட்டுமொத்த தமிழக மக்கட்தொகையில் 0.48% மட்டுமே வாழும் கம்மாக்கள் ஒவ்வொரு ஆட்சியிலும் திராவிட கட்சிகள் மூலம் (குறிப்பாக அ.தி.மு.க) குறைந்து 10 எம்.எல்.ஏ-வாவது இருக்கிறார்கள்.


இப்படியாக கம்மா சாதியினர் தமிழகம் முழுவதும் (குறிப்பாக கொங்கு பகுதியில்) கல்லூரி, மருத்துவமனை, தொழிற்சாலை என்று நடத்தி மாபெரும் ஆதிக்க சக்தியாக திகழ்கிறார்கள்