கன்னட பொதுமக்களே!
 ஒரு குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போது அதைத் தாயிடமிருந்து பிடுங்குவது போன்ற செயல் கர்நாடகாவில் நடக்கிறது!
 காவிரி தாய் என்றால் நாம் இருவருமே பிள்ளைகள், நம் இருவருக்கும் பசி தீர்ந்துகொள்ள சம உரிமை உள்ளது!
 இந்த உரிமையில்  நம்மில் யார் மூத்தவன் இளையவன் என்கிற பேச்சுக்கே இடமில்லை. 
 ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு தண்ணீர் கிடைக்கவிடாமல் தடுப்பது இனப்படுகொலை ஆகும்! 
 இந்த படுபாதகத்தைச் செய்யாதீர்கள்! 
அரசியல்வாதிகள் மீது பழியை போட்டுவிட்டு நீங்கள் காரணமில்லை என்பது போல நடந்துகொள்ளாதீர்கள்!
 கர்நாடகாவில்  உபரியாகத் தண்ணீரைத் தேக்கி அதை பன்னாட்டு நிறுவனங்கள் உறிஞ்சிக் கொள்கின்றன.
 தண்ணீர் வராத தமிழக ஆறுகளில் மணல் கொள்ளை நடக்கிறது.
 இந்த அரசியல் சதியைப் புரிந்துகொள்ளுங்கள்!
"ஆறு தோன்றும் இடம் எங்களுடையது அதனால் ஆறு எங்களுக்கு சொந்தம்" என்பது உலகில் யாருமே சொல்லாத கூற்று!
இதை அறிவுள்ள எவருமே ஏற்க மாட்டார்கள்!
 நியாயமான அளவு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மனசாட்சியுள்ள கன்னடர்கள் குறைந்த பட்சம் இணையத்திலாவது குரல் எழுப்புங்கள்!
 காவிரி விடயத்தில் கன்னட அமைப்புகள் நடத்தும் முழு அடைப்புக்கும் போராட்டங்களுக்கும் ஆதரவு கொடுக்காதீர்கள்!
 கர்நாடகத்தின் இந்த மனிதத்தன்மை அற்ற அரசியல் தொடர்ந்தால் ஒவ்வொரு கன்னடரும் கொலைவெறி பிடித்தவர் என்கிற பொது பிம்பத்தை உருவாக்கும்! 
 கடைசி கட்டத்திற்கு வந்துவிட்ட காவிரிப் பிரச்சனை விரைவில் இனமோதலில் முடியவுள்ளது!
அதனால் நமக்கு லாபம் இல்லை! நஷ்டம் மட்டுமே!
 நம்மை மோதவிட்டு லாபம் பார்ப்பவர்கள் பணக்காரர்களும் அரசியல்வாதிகளும்!
 கன்னடர் தமிழர் கலவரம் வெடித்து இரு தரப்பிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு பல நூறு உயிர்கள் போனபிறகு தவறு உணர்ந்து கண்ணீர் விடுவதை விட இப்போதே சமாதானம் செய்துகொள்வது சிறந்தது!
 "மற்ற விடயத்தில் கன்னடர்களாகிய நாங்கள் நல்லவர்கள்தான் ஆனால் காவிரியை மட்டும் கொடுக்கமாட்டோம்" என்பது ஒரு ஒருவனுக்கு விருந்து வைத்துவிட்டு கழுத்தை நெறித்துக்கொண்டு நிற்பது போன்றது!
  நாங்கள் பிச்சை கேட்கவில்லை! 
எங்கள் உரிமையைத் தான் கேட்கிறோம்! 
 மனசாட்சியுடன் நடந்துகொள்ளுங்கள்! 
No comments:
Post a Comment