Wednesday 9 November 2022

காட்டுப் பன்றியின் வீரமும் சங்க காலக் காதலும்

காட்டுப் பன்றியின் வீரமும் சங்க காலக் காதலும் 

 காதலியைப் பார்க்க குன்றநாடன் காட்டுவழி செல்கிறான். அப்போது வேடர்கள் வேட்டை நாயுடன் காட்டுக்குள் வேட்டைக்கு வந்திருந்தனர். அப்போது ஒரு காட்டுப் பன்றி வேட்டை நாயைத் தாக்கித் துரத்திவிட்டு வேடனைத் தாக்கத் தயாராக நின்றதாம். ஏனென்றால் அது தன் குட்டிகளையும் அதன் தாயையும் பதுக்கி வைத்துக்கொண்டு அரணாக நின்றதாம். வேடர்கள் அம்புகளை எய்யவே எதுவும் பன்றியின் மீது படவில்லையாம்.
 அதாவது அம்புகள் தன் மீது படாதவாறு வளைந்து சற்று விலகி அதே இடத்தில் நிற்குமாம்! 
 இதைக் கண்டு வியந்து போகிறான் குன்ற நாடன்.
இதைத் தன் காதலியிடம் கூறுகின்றான்.

 மற்றொரு நாள் அதே பாதையில் அவன் வரும்போது அந்தப் பன்றியைப் பார்க்கிறான். "இந்த பன்றி வீரத்தில் என்னைப் போன்றது எனவே இதை என்றும் கொல்லமாட்டேன்" என்று மனதுக்குள் உறுதி எடுக்கிறான்.
  காதலி வீட்டுக்கு வருகிறான். ஆனால் காதலியின் அம்மா பார்த்துவிடுகிறாள். உடனே தன் மகளிடம் "நன்றாக இருக்கிறது உன் செயல்" என்று கூறிவிட்டு சிரித்துக் கொண்டே கண்டும் காணாமல் அங்கிருந்து சென்றுவிட்டாளாம் அந்தத் தாய். தலைவி இதைத் தன் தோழியிடம் "ஒரு நகைச்சுவை கூறுகிறேன் கேள்" என்று மகிழ்ச்சியுடன் முழுவதுமாகக் கூறுகிறாள். 

நகை நீ கேளாய் தோழி! அல்கல்;
வய நாய் எறிந்து, வன் பறழ் தழீஇ,
இளையர் எய்துதல் மடக்கி,
கிளையொடு
நால்முலைப் பிணவல் சொலிய
கான் ஒழிந்து,
அரும் புழை முடுக்கர் ஆள்
குறித்து நின்ற 
தறுகட் பன்றி நோக்கி, கானவன்
குறுகினன் தொடுத்த
கூர்வாய்ப் பகழி
மடை செலல் முன்பின் தன் படை
செலச் செல்லாது,
''அரு வழி விலக்கும் எம்
பெருவிறல் போன்ம்'' என,
எய்யாது பெயரும் குன்ற
நாடன் 
செறி அரில் துடக்கலின், பரீஇப்
புரி அவிழ்ந்து,
ஏந்து குவவு மொய்ம்பின் பூச்
சோர் மாலை,
ஏற்று இமிற் கயிற்றின், எழில்
வந்து துயல்வர,
இல் வந்து நின்றோற் கண்டனள்,
அன்னை;
வல்லே என் முகம்
நோக்கி, 
''நல்லை மன்!'' என நகூஉப்
பெயர்ந்தோளே.

அகநானூறு 248

இதில் இரண்டு விடயம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
 ஒன்று வடுகர் சின்னமான காட்டுப் பன்றி வீரம் மிக்கது!
 சங்க காலத்தில் காதலுக்கு பெற்றோர் தடையாக இல்லை!

கி. பி. 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நடுகல் பன்றியால் கொல்லப்பட்ட நாய்களுக்காக வைக்கப்பட்டது.
 வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டத்தில் உள்ள அம்பலூரில் உள்ள நடுகல் ஒரு காட்டுப் பன்றியுடன் சண்டையிட்டுக் கொன்று தாமும் இறந்த முழகன், வந்திக் காகத்தி என்கிற பெயர்களையுடைய இரண்டு நாய்களுக்காக நடப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment