Wednesday 28 August 2024

தேவேந்திரர் தாழ்ந்தது எவ்வாறு

தேவேந்திரர் தாழ்ந்தது எவ்வாறு

  "தெலுங்கர் ஆட்சியில் தமிழர் நிலை" (தேதி:16.08.2016) பதிவின் ஒரு பகுதி

 //நாயக்க ஆட்சிமுறை பாளையக்காரர்கள் மூலம் மிக மோசமான சுரண்டலை குடிமக்களிடம் நடத்தியது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டோர் வேளாண்குடிகளான பள்ளர்களே. பள்ளு இலக்கியங்கள் அன்றைய பள்ளர்களின் வாழ்க்கையை பதிவு செய்துள்ளன.

பள்ளர் குலப் பெண்களும் ஆண்களும் 'கொத்தடிமைகளாக'க் கூட குறிக்கப்பட்டுள்ளனர்.
(திருமலை முருகன் பள்ளு 13:1-6).

விதைப்பு முதல் அறுவடை வரை செய்த பள்ளர்களுக்கு கூலியாக எதுவுமே தரப்படவில்லை. இவர்களுக்கு கிடைத்த பங்கு குடிசுதந்திரம், பிள்ளையாரடி, அரிநெல் என்றழைக்கப்பட்டது.

ஆனால் இவை பள்ளர்களின் தேவைக்குப் போதவில்லை என்றும் இவையும் சரியாகக் கொடுக்கப்படவில்லை என்றும் தெரியவருகிறது.

இதனால் பள்ளர்கள் மிக வறுமையில் வாடினர்.
(வையாபுரிப்பள்ளு 203-204; 
திருமலை முருகன் பள்ளு 158; 
மாந்தைப்பள் 89)

தன் கூலிக்கென ஒதுக்கிய நிலம் நாள் முழுவதும் ஒரு பன்றி மூக்கினால் கிளறும் அளவினது என்றும் அதில் தினமும் முழு கதிர் விளைந்தாலும் தனக்குப் பத்தாது என்றும் முக்கூடற் பள்ளுவில் (67) ஒரு பள்ளர் கூறுமாறு வருகிறது.

பட்பிரந்தத்தில் (82) நீண்ட கால்களையுடைய மாடன் என்பவன் ஒரே அடியால் அளந்துவிடும் அளவில் தனக்கான நிலம் இருந்ததாகவும் ஆனால் அதை உழவும் கலப்பை, மாடுகள், விதை போன்றவை தன்னிடம் இல்லை என்றும் ஒரு பள்ளர் கூறுவதாக வருகிறது.

செட்டியார்களிடம் வாங்கிய கடனுக்காக தனக்கான நெல்லிலிருந்து பள்ளர்கள் அளந்து கொடுத்ததை பட்பிரபந்தம் (139) கூறுகிறது.
மாடுகளை கொடுத்ததை வையாபுரிப் பள்ளு(115:1-3) கூறுகிறது.

பாளையக்காரர்களுக்கு கீழ் இருந்தோர் பண்ணை விசாரிப்பான்கள், இவர்கள்தான் பண்ணை என்ற பெயரில் நிலத்தைக் கையில் வைத்துக்கொண்டு மக்களை வேலைவாங்கினர் (இவர்கள் கணக்கர், மணியம், முறையம்பிள்ளை எனவும் அழைக்கப்பட்டுள்ளனர்).
இவர்களை திருடன், கைக்கூலி, வம்புக்காரன் என்றெல்லாம் திருமலை முருகன்பள்ளு(112) வெறுப்புடன் கூறுகிறது.

நாயக்க அரசின் வருமானம் நான்கில் ஒரு பங்கு நில விளைச்சல் மூலமே கிடைத்துள்ளது (டி.வி.மகாலிங்கம், Administration and Social life under Vijayanagar, பக்.48-50).

இது நிலவுடைமைக்காரர்கள் மூலம் பள்ளர்களிடமிருந்து சுரண்டி எடுக்கப்பட்டுள்ளது. நிலவுடைமை அதிகாரிகளான கர்ணம், மணியக்காரர், தலையாரி ஆகியோர் பெரும்பாலும் தெலுங்கு பேசும் பிராமணராகவோ, ரெட்டிகளாகவோ, நாயுடுகளாகவோ இருந்தனர்.
சிலர் தமிழ்பேசும் மறவர், கள்ளர் வகுப்பினராக இருந்தனர் (Burton Stein, Peasent state an society in medieval south india, p.417).

கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது (கண்.683-699) ஏராளமான செல்வந்தர்களைக் குறிப்பிடுகிறது அவர்கள் பெரும்பாலும் தெலுங்கு நாயக்கர்கள்.//

 //பள்ளு இலக்கியங்கள் மழையை எதிர்பார்த்து பள்ளர்கள் தவிப்புடன் இருந்ததை பதிவு செய்துள்ளன. 
அரசின் பாராமுகத்தால் நலிந்த வேளாண்மை மக்களைப் பஞ்சத்தில் தள்ளியது.
1622 முதல் 1770 வரை பதினான்கு முறை பஞ்சம் ஏற்பட்டு பலர் இறந்தனர்!! பலர் இடம்பெயர்ந்தனர்!
அரசு இவர்களுக்காக எந்த நிவாரண நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை
(தமிழக வரலாறு 1565 - 1967, கு.ராஜய்யன்).//

//அதுவரை இல்லாத வழக்கமாக மனுதர்மத்தை சட்டமாக்கி பின்பற்றவேண்டிய கட்டாயத்தை நாயக்கர்கால இலக்கியங்கள் கூறுகின்றன (திருவிளையாடற் புராணம் மதுரை.561,521; 
சேதுபதி விறலிவிடுதூது கண்.291,292;
கூடற்புராணம் 2; 
கமலாலய சிறப்பு 854-856,889; 
திருவருணைக் கலம்பகம், கண்.65:3; 
குமரேச சதகம் 12:5-6; 
திரு.முரு.பள்.,103).

நாயக்க மன்னர்கள் தங்கள் பெயருக்கு முன் 'வருணாசிரம தர்மங்கனுபாலித்த' என்ற பட்டத்தைப் போட்டுக்கொண்டனர் (ந.க.மங்களமுருகேசன், இந்திய சமுதாய வரலாறு, ப.311).

பள்ளர், பறையர், புலையர் கீழ்சாதி என்றும் (திரு.முரு.பள்.103),
தீண்டாத சாதியினர் என்றும் (ஐவர் ராசாக்கள் கதை, வரி 888-889; கந்.காத.,கண் 93-96)
கொத்தடிமைகள் என்றும் (பட்.பிர.93; மு.பள்.13:13-16),
இழிகுலத்தினர் என்றும் (கம.சிற.1-2) குறிப்பிடப்படுகின்றனர்.
பள்ளர்கள் அடிமைகளாக விற்கப்பட்டும் உள்ளனர் (கூள.விற.க.364).//

 //பண்ணைவிசாரிப்பான்கள் வேளாண்மை பெண்களை திட்டுவதும், அடிப்பதும், காமப்பசிக்கு இரையாக்குவதும் நடந்துள்ளது (மா.பள்.51; பட.பிர.105,106; திரு.முரு.பள். 152).//

மிக விரிவாக அறிய தேடுக:- தெலுங்கர் ஆட்சியில் தமிழர் நிலை வேட்டொலி

No comments:

Post a Comment