Friday 31 January 2020

பெங்களூர் எங்களூர் - 2










பெங்களூர் எங்களூர் -2

 பெங்களூர் நகரை நிர்மாணித்தவர் கேம்பே கவுடா (1526 - 1574) என்பவர்.

 இவர் உண்மையில் வன்னியக் கவுண்டர் ஆவார்.

 கன்னடருக்கு தமிழர் என்று சொல்லவராமல் திகிளர் என்றுதான் கூறுவார்கள்.
 கேம்பே கவுடா ஒரு திகிளப் பள்ளி என்று குறிக்கப்படுகிறார்.

 இவர் பூர்வீகம் காஞ்சிபுரம்.
அங்கிருந்து 'முரசு ஒக்கல்' எனும் குடியினர் கன்னடநாட்டிற்கு போய் குடியமர்ந்தனர்.
 இவர்கள் இன்று முரசு ஒக்கலிகர் என்று அறியப்படுகின்றனர்.
 இவர்களின் குலதெய்வம் காஞ்சி காமாட்சி.

 மேலும் ஒரு சான்று உள்ளது.
கேம்பே கவுடா வம்சாவழியான மும்முடி தம்மபூப்பா என்பவர் "ராஜேந்திர சோழ சரித்தா" எனும் நூல் எழுதியுள்ளார்.
 [Mysore gazetteer, Vol 5, page 45, 1930.]

 தென் கர்நாடகத்தின் ஆதிகுடிகளான தமிழர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழை மறந்துவிட்டனர்.
 இவர்கள் திகிளர் என்றே இப்போது அழைக்கபடுகின்றனர்.
 பெங்களூரில் கொண்டாடப்படும் பச்சைக் கரகத் திருவிழா இவர்கள் நடத்துவதே ஆகும்.

 கைகளில் வாளேந்தி "பவளமலை எங்கள் மலைநாடே!" என்று தமிழில் பாடியவாறே பச்சைக் கரகத்தை தலையில் ஏந்துவர்.

 1930 இல் பெங்களூர் மாவட்ட மக்கட்தொகை 3,07,124 ஆகும்.
 இதில் திகிளர் 31,644 பேர்.

 (பெங்களூர் எங்களூர் -1 இல் உள்ள வரைபடத்தை ஒருமுறை பார்க்கவும்)

 1799 இல் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டு ஆங்கிலேயர் கைக்கு பெங்களூர் வந்தது முதல் 1947 வரை மைசூர் அரசுக்கும் இந்த பெங்களூர் மைய நகருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
 மைசூர் அரச அதிகாரம் புறநகர் பகுதியான பேட்டை வரை மட்டுமே.
 மற்றபடி பெங்களூர் சென்னை மாகாணத்தின் கீழ்ஆங்கிலேயரின் நேரடி நிர்வாகத்தில் இருந்தது.

 ஆம். 1809 இல் ஆங்கிலேயர்களது படைமுகாமாக பெங்களூர் தண்டு பகுதி (cantonment) இருந்தது.

 1815 இல் மன்னர் எழுத்துப் பூர்வமாக இதை ஆங்கிலேய தூதமைச்சருக்கு தனிச் சொத்தாகக் கொடுத்து வரிவசூலிலும் தலையிட மாட்டேன் என்று எழுதிக் கொடுத்தார் (release deed).

 அவ்வாறு மைசூர் மன்னர் கொடுத்தது அன்று 22 ஊர்களாக இருந்தது.
 அவை
அலசூர்,
ஆடுகோடி,
செல்லகட்டா,
தொம்மளூர்,
உப்பாரப்பள்ளி,
குப்பசந்திரா,
மாவள்ளி,
குறமங்கலம்,
நீலசந்திரா,
பேடரள்ளி,
சொன்னேனள்ளி
ஆகியனவாகும்.

 1881 இல் பெங்களூர் கோட்டையை மட்டும் ஆங்கிலேயர் மன்னருக்கு கொடுத்தனர்.
 இதே ஆண்டில் cantonment என்று அழைக்கப்பட்டதை மாற்றி civil and military என்று பெயர் மாற்றினர்.

 1906 ஆம் ஆண்டு தற்போது "இந்திய அறிவியற்கூடம் (Indian institute of science)" இருக்கும் நிலமும் சேர்க்கப்பட்டு ஆங்கிலேயரின் நேரடி ஆட்சிப்பகுதி பரப்பளவு 13.54 சதுரக்கல் (சதுரமைல்) என விரிந்தது.

 ஆங்கிலேயர் தமது நிர்வாகப் பகுதியை ஆறு பிரிவுகளாக பகுத்திருந்தனர்.
அவை
1.அலசூர்
2.தென்பகுதி
3.கிழக்கு பொது அங்காடி (east general bazaar)
4.மேற்கு பொது அங்காடி (west general bazaar)
5.கிளீவ்லன்ட் நகர்
6. மேட்டுத்திடல் (high ground)

 அதாவது இன்றைய பெங்களூரின்
வடக்கே பாரதி நகர்,
நடுவில் சிவன்செட்டி வட்டம்,
தெற்கே நீலசந்திரா மற்றும் ஆடுகோடி
கிழக்கே அலசூர் உட்பட்ட நிலப்பரப்பு.

 இதில் தற்போதைய
தொம்மளூர்,
கப்பன் பூங்கா,
தூதமைச்சரக (residency) சாலை,
 தலைமை அஞ்சலகம்,
சூளை,
ரிச்மண்ட் நகர்,
ரசல் அங்காடி,
அணிவகுப்பு திடல் (parade ground),
 தூய யோவான் குன்று,
 கிளீவ்லேண்ட் நகர்,
காக்ஸ் நகர்,
புகையிலைத் தொழிலகம்,
ஃபிரேசர் நகர் (பாப்பிரெட்டி பாளையம்),
பிளாக் பள்ளி,
பெங்களூர் கிழக்கு (Bangalore east),
ரிச்சர்ட் நகர்
முதலியன அடங்கும்.

 மைசூர் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பேட்டை பகுதி 11 சதுரக்கல் பரப்பளவு மட்டுமே இருந்தது.
 இதில் கோட்டை, சிக்கபேட்டை, தொட்டபேட்டை, சாமராஜப் பேட்டை, சங்கரபுரம், பசவன்குடி, சேசாத்திரிபுரம், மல்லேஸ்வரம், அரண்மனை ஆகியன இருந்தன.

 1947 வரை தண்டுப் பகுதிக்கும் பேட்டை பகுதிக்கும் இடையில் 6 சுங்கச்சாவடிகள் இருந்தன.
 அவை இன்றுள்ள
கண்டீரவா விளையாட்டரங்கம் எதிரிலும்
 ஓசூர் சாலையில் உள்ள கிறித்துவர் கல்லறைக்கு அருகிலும்
ராமநாரயண் செல்லாராம் கல்லூரி மூலையிலும்
 பழைய சென்னை சாலையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை பக்கத்திலும்
 கன்னிங்காம் சாலையிலும்
 தொம்மளூரிலும்
தலைமை அஞ்சலகம் அருகிலும்
 இருந்தன.

  1948 வரை தண்டு பகுதிக்கும் பேட்டை பகுதிக்கும் தனித்தனி நீதிமன்றங்கள் இருந்துள்ளன.
 தண்டுப் பகுதிக்கான சிறை வேலூர் சிறைதான்.

 1948 வரை இப்பகுதியில் பள்ளிகளில் கன்னடம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது.

 1948 இல் மன்னர் வருகை தந்தபோது தண்டு மக்கள் மைசூர் அரசரை முதன்முதலாக பார்த்தனர்.

 1950 இல் தான் தண்டு நகராட்சியும் பேட்டை நகராட்சி இணைக்கப்பட்டு பெங்களூர் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
 அப்போதும் தமிழரே பெரும்பான்மையாக இருந்தனர்.

 1956 வரை இப்பகுதி கல்வி நிர்வாகம் சென்னை பல்கலை மற்றும் சென்னை அரசிடம் இருந்து வந்தது.

 1956 இல் எந்த பொருத்தமும் இல்லாமல் பெங்களூர் கர்நாடகாவுடன் இணைக்கப்பட்டது.
 அப்போது அந்த மாநாகராட்சி எல்லைக்கும் தமிழக இல்லைக்கும் இடையே 4 கிலோமீட்டர் தொலைவுதான் இருந்தது.

 நன்றி: அறிஞர் குணா அவர்கள் எழுதிய
விழுதுகள் (கட்டுரைத் தொகுப்பு)






Thursday 30 January 2020

இங்கு திராவிடம் விற்கப்படும்

இங்கு திராவிடம் விற்கப்படும்

தமிழகத்தின் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தி.மு.க விடம் பணம் பெற்ற தகவல்கள் வெளியானது நினைவிருக்கலாம்.
இதற்கு முன்னோடியும் ஈ.வே.ரா தான்.

  திராவிட கட்சி இரண்டாகி அதன் ஒரு பிரிவை ஜெயலலிதா கைப்பற்றி 1991 இல் ஆட்சியமைக்கிறார்.

தி.மு.க வை சமாளிக்க திராவிட கூடாரத்தில் இருந்து யாரையாவது தன் பக்கம் இழுக்க முடியுமா என்று பார்க்கிறார்.

பணம் தருவதற்கும் தயாராக இருந்தார்.

அதெப்படி நடக்கும்?
கேவலம் பணத்துக்காக இத்தனைக் காலம் யாரை எதிர்த்தார்களோ அவர்களுடனே வந்து ஒட்டிக் கொள்வார்கள்?
அந்த அளவுக்கு மானம் கெட்ட யாரும் உண்டா?
என்று அனைவரும் நினைத்தபோது வீரமணி போய் ஜெயலலிதாவுடன் சேர்ந்துகொண்டார். வெளிப்படையாக 5 லட்சம் ரூபாய் பணமும் வாங்கிக் கொண்டார்.

இது பற்றி கேள்வி எழுந்தபோது விடுதலை (03.10.1991) இதழில்
அது எனக்காக வாங்கவில்லை,
"சுயமரியாதை இயக்க பிரச்சார நிறுவனத்தின்" வளர்ச்சிக்காக வாங்கிய நிதி என்று விளக்கமளித்தார்.
(நிறுவனத்தின் பெயரைக் கவனத்தீர்களா ராமகிருஷ்ண சந்திரபோஸ் மாதிரி)

அதோடு நில்லாமல் பெரியாரும் பார்ப்பன முதலாளிகளிடம் பணம் பெற்றுள்ளார் என்பதையும் அதனால் கொள்கை தவறிவிட்டதாக அர்த்தமில்லை என்றும் தெளிவாக விளக்கமளித்துள்ளார்.

(அன்று தமிழ்தேசியத்தின் குரலாக ஒலித்த அறிஞர் குணா அவர்களை கருத்தியல் ரீதியில் எதிர்கொள்ள இயலாமல் ஜெயலலிதாவிடம் சொல்லி தடா வில் உள்ளே தள்ளியதும் வீரமணிதான்)



Wednesday 29 January 2020

காத்திருக்கும் தங்கம் - 1

காத்திருக்கும் தங்கம் -1

-------
காலம்: கி.பி. 1790

 "நமது 33 வது ரெஜிமண்ட் திப்பு சுல்தானோடு போரிட நேரும் என்று நினைக்கிறாயா?"

 "ஆம். நிச்சயம். அதோ அங்கே பார்.
இவர்கள்தான் அதற்கு காரணம்"

 "என்ன?! ஆற்று மணலை அள்ளி வாணாலியில் போட்டு சலித்துக் கொண்டிருக்கும் இவர்களா இதற்கு காரணம்?!"

 "ஆம் இவர்களுக்கு அரிப்பறையர் என்று பெயர்.
 இவர்கள் ஆற்று மணலைப் பார்த்தே அதில் தங்கத் துகள்கள் இருக்குமா என்று கணித்து அதை சலித்து எடுக்கும் திறமை உள்ளவர்கள்.
 இவர்களைப் பார்த்துதான் நம் தளபதி இந்த பகுதியில் தங்கம் இருக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக இங்கிலாத்திற்கு அறிக்கை அளித்துள்ளார்.
 கட்டாயம் திப்புவை வீழ்த்தி தங்கத்தை தோண்டி எடுக்காமல் விடமாட்டார்கள்"

--------------
காலம்: கி.பி. 1802

 "இதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டு திப்பு சுல்தானை தோற்கடித்தோம்.
 மகாராஜா நீங்கள் ராஜாவாகவே இருக்க வேண்டுமானால் கோலார் தங்க வயல் எங்களுக்கு வேண்டும்.
 உங்களுக்கு 5% கமிசன் கொடுத்து விடுகிறோம்"

 "சரி சரி 7% கொடுத்துவிடலாம்.
நாங்கள் ஆங்கிலேயர்.
வாக்கு தவறமாட்டோம்.
 உங்கள் மைசூர் ராஜ்யத்தின் மொத்த வருவாயில் இது மூன்றில் ஒரு பங்காக இருக்கும்"

-----------
காலம்: 1860

 "கிடைத்துவிட்டது! ஆகா கிடைத்துவிட்டது"

 "என்ன கேப்டன் பிளம்மர் என்ன கிடைத்துவிட்டது"

 "மைசூர் சுரங்கத்திற்கு மேற்கே 173 அடி ஆழத்தில் தங்க மலையே இருக்கிறது.
 ஏற்கனவே சோழர்கள் காலத்தில் வெட்டி எடுத்த தடத்தை வைத்து கண்டுபிடித்து விட்டேன்"

 "அப்படியா?! அது என்ன தடம்"

 "ஆம். வட ஆற்காடு மாவட்டத்தின் ஜவ்வாது மலை மீது இருந்து பார்த்தேன்.
 கோலாரிலிருந்து மனிதனால் உருவாக்கப்பட்டு கைவிடப்பட்ட ஒரு பாதை மலைகளுக்கு நடுவே தமிழ் பகுதி வரை வருவது தெரிகிறது"

 "எனதருமை பிளம்மர்!
 உன் விடாமுயற்சிக்கு வெற்றி கிடைத்துவிட்டது.
 இனி இந்த தற்காலிகச் சுரங்கம் உலகமே அறியும் இடமாக ஆகப்போகிறது"

--------
காலம்: கி.பி. 1880

 "பூமிக்கடியில இந்த தங்க மலைத் தொடர் (lode) வடக்கு நோக்கி நீள்கிறது.
 வெட்டி எடுத்தால் உலகத்தின் மொத்த தங்க தேவையையே பூர்த்தி செய்யலாம்"

 "நல்லது மிஸ்டர் ஆர்.பி.பூட்!
 நம் நாட்டிலிருந்து வல்லுநர்களை வரவழைத்து முழுவீச்சில் சுரங்கம் தோண்டிவிட வேண்டியதுதான்.
 நீ என்ன சொல்கிறார் ஹெய்டன்?!"

 "நாம் முதலில் மதராஸ் மாகாணத்தில் இருந்து தமிழர்களை வரவழைக்கலாம்.
 அவர்கள்தான் உலோக தொழில்நுட்பத்தில் உலகிற்கே முன்னோடி.
 இப்போது கடும் பஞ்சம் நிலவுவதால் குறைந்த கூலிக்கு அழைத்து வரலாம்.
 இங்கே ஏற்கனவே கால்வாசி தமிழ் பேசுபவர்களும் இருக்கிறார்கள்.
 குறிப்பாக சேலத்தில் கட்டிப் பறையர் என்றொரு சாதி உண்டு.
அவர்கள் செய்த தனித்துவமான எஃகு மூலம் செய்யப்பட்ட டமாஸ்கஸ் வாளைத்தான் அலெக்சாண்டர் வைத்திருந்தார் என்று சொன்னால் நம்புவீர்களா?!"

---------
 காலம்: கி.பி. 1905

 "இந்தியாவிலேயே முதன்முதலாக மின்சார உற்பத்தி செய்த சாதனைக்குப் பிறகு
 இந்த ஆண்டு நாம் 27 டன் தங்கத்தை எடுத்துள்ளோம்.
 இப்போது கோலார் உலகிலேயே பெரிய தங்கச் சுரங்கம் என்ற பெயர்பெற்றுள்ளது.
 இது பின்னாட்களில் மாறலாம்.
 ஆனால் ஓராண்டில் இவ்வளவு டன் தங்கம் வேறு எங்கும் கிடைக்குமா என்று கேட்டால் அதற்கு வாய்ப்பில்லை என்றுதான் கூறவேண்டும்.
 நமது கம்பனியான ஜான் டெய்லர் அண்ட் சன்ஸ் அதன் பொற்காலத்தில் இருக்கிறது"

 "இனி நம் திட்டங்கள் என்ன?"

 "பத்தாண்டுகள் முன்பு மைசூர் அரசிடம் பேசி சுரங்கங்களுக்கு தனி இரயில் பாதை போட்டு மெட்ராஸ் பெங்களூர் ரயில் பாதையுடன் இணைத்தோம்.
 அதிலிருந்து நமக்கு அமோக வளர்ச்சிதான்!
 இதுவரை இங்கே ஆண்கள் மட்டும் இருந்த காரணாத்தால் கிளப், விளையாட்டு அரங்கம், பொழுதுபோக்கு திடல் என கட்டினோம்.
 ஆனால் தற்போது 100 ஆங்கிலேயக் குடும்பங்கள் குடியேறியுள்ளன.
 எனவே நமது பிள்ளைகளுக்கு ஒரு சிறிய ஆங்கில பள்ளியும்
 வேலைசெய்யும் தொழிலாளர்களுக்காக ஒரு மருத்துவமனையும் கட்டவுள்ளோம்"

 "இது எத்தனை ஆண்டுகள் தொடரும்?!"

 "கணிப்புப்படி இன்னும் 50 ஆண்டுகள் வரை இதில் தங்கம் கிடைக்கும்.
 ஆனாலும் விரிவாக்க ஆய்வுகள் நடந்துவருகின்றன."

------

 காலம்: 1920

 "கோலாரின் மக்கட்தொகை ஒரு லட்சத்தை நெருங்கவுள்ளது.
 இருபத்தி நாலாயிரம் பேர் வேலை செய்கிறார்கள்.
 கோலார் சுரங்கம் 1200 அடி ஆழம் வரை சென்றுவிட்டது.
 இதுவே உலகின் முதலாவது ஆழமான சுரங்கம்.
 உலகப் போர் காரணமாக தங்கத்தின் விலை மேன்மேலும் கூட்டிக்கொண்டே போகுமாம்.
 இதெல்லாம் தெரியுமா உனக்கு?!"

 "இதில் என்ன பெருமை முருகேசா?!
 இங்கே 400 ஆங்கிலேயர்கள் 600 ஆங்கிலோ இந்தியன்கள் பதவியில் இருக்கிறார்கள்.
 இதுபோக 23000 பேர் தொழிலாளர்கள்.
 பெரும்பாலும் தமிழர்கள்.
 அதிலும் குறிப்பாக நம் போன்ற பறையர்கள்.
 நமக்கு மிஞ்சியது என்ன?!
கூரைவேய்ந்த லைன் வீடுகளில்தான் வசிக்கிறோம்.
 15 மணிநேரம் வேலை.
நாட்டிலேயே முதன்முதலாக மின்சாரம் இங்கே வந்தது.
 30 ஆண்டுகள் தாண்டியும் நம் வீடுகளில் இன்னமும் மின்சாரம் வரவில்லையே!"

-------
காலம்: 1953

 "கோலாரில் காலம் முடிந்துவிட்டது.
முதன்முதலாக உரிகையம் சுரங்கத்தை மூடிவிட்டனர்.
 இனி படிப்படியாக எல்லாவற்றையும் மூடிவிடுவார்களாம்.
 டெய்லர் கம்பனி வெளியேறவுள்ளது.
 இந்த சுரங்கத்தை நாட்டுடைமை ஆக்கி அரசே எடுத்துக் கொள்ளுமாம்"

 "ஆம். இந்திய அரசு எடுத்துக் கொள்ளுமாம்.
 ஆங்கிலேயர் மைசூர் அரசுக்கு கமிசனாவது கொடுத்தனர்.
 இனி கர்நாடக அரசுக்கு சல்லிக்காசு கொடுக்காது மத்திய அரசு என்று கூறுகிறார்கள்".

 "என்றால் மத்திய அரசும் மாநில அரசும் சுரங்கத்தை நம்பி வாழும் ஒரு லட்சம் பேரை கதியில்லாமல் ஆக்கப் போகிறார்கள் என்று சொல்"

--------

காலம்: 1983

 "கன்னடத்தை கட்டாயமாக்கும் கோகாக் அறிக்கைக்கு கோலார் தமிழர்கள் எதிர்ப்பா?!
 
 "ஓகோ! அவ்வளவு திமிராகி விட்டதா?!"

 "அதற்கு தக்க பாடம் கற்றுக்கொண்டனர்.
 தமிழில் கல்வி வேண்டி நடந்த போராடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி 4 பேரைக் கொலை செய்தாயிற்று"

"ஹா! ஹா! ஹா!"

 "மாரிக்குப்பம் பகுதியில் தமிழர்கள் ரயில் நிலையத்தையும் அஞ்சல் அலுவலகத்தையும் கொளுத்திவிட்டனர்"

 "என்ன?!"

"இனி அவர்கள் அஞ்சலகமே இல்லாமல் அல்லாட வேண்டியதுதான்"

 "தங்கவயலை விரைவில் மூடிவிட்டால் இவர்கள் கொட்டம் அடங்கிவிடும்"

-------------
 காலம்: 1989

 " என்ன சொல்கிறீர்கள் மிஸ்டர் நடராஜன் ஐயர்?!
கோலாரில் ஒரு கிராம் தங்கம் எடுக்க 668 ரூபாய் ஆகிறதா?!
பம்பாயில் ஒரு கிராம் தங்கமே 350 ரூபாய்தானே?!"

 "ஆம். 1960 இல் உற்பத்தி செலவு கிராமுக்கு 12 ரூபாய்தான்.
 1972 இல் 33 ரூபாய்.
 தற்போது தங்கம் கிடைப்பது சிக்கலாகவும் அப்படியே கிடைத்தாலும் தரம் குறைந்ததாகவும் இருக்கிறது.
 அதாவது நாம் வெட்டிவரும் தங்கமலை ஆழத்தை நோக்கி செல்கிறது"

 "என்றால் இதை மூடிவிடலாமா?!"

 "மூடிவிடலாம்தான். ஆனால் இதை நம்பியிருக்கும் பத்தாயிரம் தொழிலாளருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் என்ன பதில் சொல்வது?
 நூறு ஆண்டுகளாக இங்கே வாழ்ந்துவரும் அவர்களை எங்கே போகச் சொல்வது?
 ஆழ்சுரங்கம் வெட்டுதல் மற்றும் குடைந்து வழி அமைத்தல் ஆகியவற்றில் இவர்கள் திறமை வேறு எவருக்கும் வராது"

 "அதெல்லாம் கவலை இல்லை.
அவர்கள் வந்தேறிகள்.
 இதை நடத்தி லாபம் வந்தாலும் மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது.
 அதனால்தான் இவர்களுக்கு மாநில மின்துறை கூட சலுகை விலையில் மின்சாரம் வழங்குவது கிடையாது.
 தொழிற்சங்க தலைவரை கூப்பிட்டு இவர்கள் தகுதி இல்லாதவர்கள் என்று எழுதித் தரச்சொல்லி
 ஏதோ பெயருக்கு மாற்று திட்டம் ஒன்றை செயல்படுத்தி சிலபேருக்கு மாற்று வேலை வழங்கிவிட்டு அப்படியே கைகழுவி விடலாம்"

 "ஐயா! என்னால் அப்படி முறைகேடாக செயல்பட முடியாது"

 "நீங்கள் செய்துதான் தீரவேண்டும்"

 "என்னை வற்புறுத்தினால் எனது சுரங்க தொழில்நுட்ப இயக்குநர் பதவியை ராஜினாமா செய்வேன்"

 "நீங்கள் இப்படி பலமுறை மிரட்டி காரியத்தை சாதிக்கிறீர்கள்.
 உங்களைப் போன்ற சிலர்தான் எப்போதோ மூடியிருக்க வேண்டிய தங்கவயலை மூடவிடாமல் பெரும் தடையாக இருக்கிறீர்கள்.
 ஓ! நீங்களும் அந்த இனம்தானே!?"

 "ஐயா நான் நியாயத்தைப் பேசுகிறேன்.
சென்ற 4 ஆண்டுகளாக நான் நடத்திய ஆய்வுப்படி இதன் அருகிலேயே இன்னொரு தங்க மலை புதைந்து இருக்கிறது.
 அங்கே சுரங்கம் தோண்டினால் 6000 பேருக்காவது வேலை கொடுக்கலாம்.
 15 ஆண்டுகள் மூடுவது பற்றி யோசிக்க வேண்டாம்"

 "சரி! இது இறுதி வாய்ப்பு! தங்கம் இருந்தால் மட்டும் போதாது குறைந்த செலவில் எடுக்க முடியுமா என்பதுதான் முக்கியம்"

----------
காலம்: 1990
இடம்: அசோகா விடுதி, பெங்களூர்.

 "கனிம வளத்துறை செயலர் பி.கே. லாஹிரி அவர்களே!
 கோலார் சுரங்க தலைவர் ஐ.எம். ஆகா அவர்களே!
 மேலாண்மை இயக்குநர் பி.ஏ.கே. ஷெட்டிகர் அவர்களே!
 மற்றும் அதிகாரிகளே!
 நாம் இங்கு கூடியிருப்பது தங்கவயல் தொழிலாளர்களின் எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்கத்தான்"

 "அது பற்றி மேற்கொண்டு விவாதிக்க என்ன இருக்கிறது மிஸ்டர் ஐயர்?!"

 "நாம் வெட்டியெடுத்து தீர்ந்துபோன சாம்பியன் படிவத் தொடர்க்கு கீழே 3000 அடி ஆழத்தில் 200 கிலோ தங்கம் தரவல்ல மேலும் ஒரு தங்க மலை இருப்பது பற்றி நான் கூறியபோது ஆழம் அதிகம் என்று காரணம் காட்டி  நீங்கள் மறுத்துவிட்டீர்கள்.
அதனால் தற்போது ஆழம் குறைந்த இடத்தில் மேலும் இரண்டு தங்க படிவங்களை நான் கண்டறிந்துள்ளேன்.
 இங்கே Shallow depth mining செய்யலாம்"

 "குறைந்த ஆழம் என்றால் செலவு குறைவு எனவே யோசிக்கலாம்.
கூறுங்கள் பார்ப்போம்"

 "மைசூர் சுரங்கப் பகுதியில் இருந்து நந்திதுர்க்க சுரங்கப் பகுதிவரை குறைந்த ஆழத்தில் தங்க படிவத்தொடரின் கிளைகள் உள்ளன"

 "குறைந்த செலவு என்கிற நமது கொள்கை அதற்கு பொருந்துமா?!"

 "இதற்குப் பொருத்தமாக இருப்பது மைசூர் சுரங்கத்தில் உள்ள பல தங்கப் படிவத் தொடர்களில் ஒன்றான பிரவுன் படிவத்தொடர்.
 இது அங்கு புதைந்துள்ள தங்கமலையின் அடிப்பரப்பு வரை செல்கிறது.
 diamond drilling செய்து ஆராய்ந்தால் இதை உறுதிசெய்யலாம்"

 "சரி இரண்டாவது?"

 "இரண்டாவதுதான் மிக முக்கியமானது.
தற்போது வெட்டியெடுத்த அதே தங்கமலைத் தொடருக்கு இணையாக 400 அடி ஆழத்தில் தங்கம் இருக்கிறது.
 இது 5000 அடி வரை நீள்கிறது.
இங்கே ஒரு டன் தங்க கனிமம் எடுத்தால் அதில் குறைந்தபட்சம் 10 கிராம் முதல் அதிகபட்சம் 35 கிராம் வரை தங்கம் கிடைக்கும்.
 சுருக்கமாகக் கூறினால் 1934 இல் கோலார் இருந்த அதே நிலையை எட்டலாம்"

 "முதல் இடத்திற்கு அருகிலேயே என்றால் இதுபற்றி முதலில் யோசிக்கலாம்.
 எங்கே என்று தெளிவாக சொல்லமுடியுமா?"

 "McTaggart's Inclined shaft இருக்குமிடம் தொடங்கி அதாவது பாரத மண்வாரித் தொழிலகம் அமையப்போகிற இடத்தில் இருந்து கோல்கொண்டா Shaft இருக்கும் இடம்வரை ஏற்கனவே வெட்டியெடுத்த சாம்பியன் தங்கப்படிவ ஓட்டத்திற்கு இணையான போக்கில் இது இருக்கிறது.
 இதை வெட்டியெடுத்தால் 6000 பேருக்கு 15 ஆண்டுகள் வரை வேலைவாய்ப்பு கிடைக்கும்"

 "வேலைவாய்ப்பு பற்றி பிறகு பேசலாம்.
 இவை இரண்டுதானா?! மேலும் உண்டா?!"

 "குறைந்த ஆழத்தில் என்றால் மூன்றாவது ஒன்று உண்டு.
 ஆனால் அதை முழுமையாக ஆராயவில்லை.
 நந்திதுர்க்க சுரங்கத்தின் தலைப்பகுதி Oriental Lode எனும் படிவத்தொடர்.
 இதன் அடிப்பரப்பு கிளை அதாவது foot- wall தான் அந்த மூன்றாவது இடம்"

 "சரி. மிஸ்டர் லாகிரி!
இவர் கூறுவதை செய்யலாமா?"

 "அது வந்து...
எனக்கு இவர் சொல்வது ஒன்றுமே புரியவில்லை"

 "என்னது புரியவில்லையா?! நியாயப்படி நீங்கள்தான் இந்த இடத்தில் நின்று இதையெல்லாம் விளக்கவேண்டும்!
 மிஸ்டர் ஐயர் இதை எழுத்துப் பூர்வமாக விரிவாக சமர்ப்பிக்க முடியுமா?"

 "ஏன் அதை ஒரு வல்லுநர் குழு நியமித்து ஆராயப் போகிறீர்களா?"

 "சரியாகச் சொன்னீர்கள்"

"ஆக இங்கிருக்கும் யாருக்குமே நான் சொன்னது புரியவில்லை"

-------
(தொடரும்)









Tuesday 21 January 2020

வடவருக்கு தேவாரம் பயிற்றுவித்த இராசரான்

வடவருக்கு தேவாரம் பயிற்றுவித்த இராசரான்

தஞ்சை பெரியக்கோவிலில் காணப்படும் ராஜேந்திர சோழன் கல்வெட்டு, தேவாரம் பயிற்றுவித்த ஆசிரியருக்கு தந்த குருதட்சணையை விவரிக்கிறது.

இது அவரது 19 ஆட்சியாண்டில் அதாவது கி பி 1031 இல் வெட்டப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டில் ராஜேந்திர சோழனின் " திருமன்னி வளர " என்று தொடங்கும் நெடிய மெய்க்கீர்த்தி தொடரில் இந்த செய்தியும் இடம்பெறுகிறது .

இராசேந்திர சோழன் தனது 19 வது ஆட்சியாண்டில் 242 ம் நாளில் இந்த கொடை உத்தரவை பிறப்பித்தார்.
அதில் கங்கைகொண்ட சோழபுரத்து கோவிலின் உள்ளே அமைந்திருக்கும் முடிகொண்ட சோழன் திருமாளிகையின் வடபக்கத்தில் தேவாரம் பயிற்றுவிக்கும் கல்லூரி ஒன்று இயங்கியதும்
அக்கல்லூரியில் அரசர்களின் புதல்வர்கள், அமைச்சர், படைத்தலைவர் போன்ற அதிகாரிகளின் புதல்வர்களும் இன்னிசை கருவிகளுடன் அமைதியாக தேவாரம் கற்றுக்கொண்டதும் கூறப்பட்டுள்ளது.

மேலும் தேவாரத்தை பயிற்றுவித்த ஆசிரியரான குரு சர்வசிவ பண்டிதருக்கும்
அவரின் சீடர்களாக இருந்த ஆரிய தேசம், மத்திய தேசம், கௌட தேசம் முதலிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும்
நிறைந்த அளவான ஆடல்வல்லான் எனும் மரக்காலால் ஆண்டுதோறும் 2000 கல நெல்லை தட்சணையாக க் கொடுத்தார் என்று அந்தக் கல்வெட்டு கூறுகிறது .

இந்த உத்தரவானது சூரிய சந்திரர் உள்ள அளவும் நிலை பெற்றிருக்கவேண்டும் என்று தெரிவிக்கிறது.
இந்த கல்வெட்டை செம்பியன் விழுப்பத்தரையன் என்பவன் எழுதியிருக்கிறான்.

இதில் சுவையான செய்தி அந்தக் கல்லூரியில் தேவாரம் பயிற்றுவித்த சர்வசிவ பண்டிதர் தமிழ் நாட்டை சேர்ந்தவராகத் தெரியவில்லை.
அவரது சீடர்களும் வட புலத்தை சேர்ந்தவராகவே உள்ளனர்.

இடைக்காலச் சோழர் காலத்திய சைவம் பாசுபதம், காளாமுகம், ஆகிய பல பிரிவுகளுடன் படர்ந்து இருந்தது தெரியவருகிறது .

சோழ நாட்டுடன் அன்றைய இந்தியாவின் பல வட மாநிலங்களும் ஆன்மீக ரீதியில் தொடர்புடன் விளங்கியது தெரியவருகிறது.
வட மாநிலத்தவரும் நமது தேவாரம் முதலியவற்றை பயிற்றுவிக்கும் விதத்தில் அவைகளை நன்கு பயின்றிருந்தனர் என்பதும் தெரிகிறது .

[கல்வெட்டு செய்தி:
முனைவர் ஜெகதீசன் எழுதிய தமிழ் இலக்கியத்தில் கல்வெட்டு இயல் கூறுகள்
பக்கம் 89]

பதிவர்: Annamalai Sugumaran

கற்பு கூடாது என இந்து மத எதிர்ப்பு ஊர்வலத்தில் கூறிய ஈ.வே.ரா












கற்பு கூடாது - இந்து மத எதிர்ப்பு ஊர்வலத்தில் ஈ.வே.ரா
24.01.1971 தினமணி செய்தி படத்தில் உள்ளது.
அதில் "மத உணர்வை அவமதிக்கும் விதத்தில் தி.க ஊர்வலம்" என்ற தலைப்பில் சேலத்தில் ஈ.வே.ரா தலைமையில் நடந்த "மூடநம்பிக்கைகள் ஒழிப்பு மாநாடு" பற்றிய தகவல்கள் உள்ளன.
அதில் முருகர் பிறப்பு பற்றி ஆபாசமாக வரைந்து எடுத்துவந்தது பற்றியும் ராமர் சிலையை செருப்பால் அடித்தது பற்றியும் உள்ளது.
இதற்கு கருணாநிதி அரசாங்கம் முழு போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது.
அந்த மாநாட்டில் போடப்பட்ட தீர்மானம்தான் முத்தாய்ப்பு!
பிறன் மனைவியை அபகரிப்பது இந்தியன் பீனல் கோட்டின் கீழ் ஒரு குற்றமல்ல வென்று விதிப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு சர்க்காரை கேட்டுக்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
புகைப்படத்திற்கு நன்றி:
செங்கோட்டை ஸ்ரீராம்்
(dhinasari .com)

Saturday 18 January 2020

சல்லிக்கட்டு நாயகன் ரஞ்சித் உடன் முகமது பாய்

சல்லிக்கட்டு நாயகன் ரஞ்சித் உடன் முகமது பாய்

பேட்டியாளர்: உங்கள் வெற்றிக்கு யார் காரணம்

ரஞ்சித்: இதோ என் நண்பன் தான்.
இவன் தந்த ஊக்கம்தான் காரணம்

பேட்டியாளர்: பெயரென்ன?

ரஞ்சித்: முகமது பாய்

(காணொளி க்கு நன்றி News7)

https://m.facebook.com/story.php?story_fbid=2118869388216703&id=100002809860739

Tuesday 7 January 2020

கதிர்காமம் நமதே














கதிர்காமம் நமதே!

 இலங்கையில் தென்கோடியில் முழுக்க சிங்களவர் நிறைந்திருக்கும் பகுதியில் தமிழீழ எல்லைக்கு சற்று அப்பால் இருக்கிறது கதிர்காமம்.

 இங்கே இருக்கும் முருகன் கோவில் உலகப்புகழ் பெற்றது.

 திருப்பதி, காளத்தி, சபரிமலை போல வேற்றினத்தார் குடியேறி தமிழரிடமிருந்து ஆக்கிரமித்துக் கொண்ட மற்றொரு புனித மண்.

 இலங்கையில் பௌத்த மதவெறி தலைதூக்கும் முன் சிங்களவரும் தமிழரும் தமது மதம் தாண்டி பிறமத தெய்வங்களையும் வணங்கியே வந்துள்ளனர்.
 இசுலாமியர் கூட கதிர்காமம் வந்து வணங்கியுள்ளனர்.
 50 ஆண்டுகள் முன்புவரை கூட தீமிதிக்கும் சடங்கில் பங்கெடுத்துள்ளனர்.
 கைவிடப்பட்ட சிறிய தர்கா ஒன்று கோவில் வளாகத்தினுள் இருக்கிறது.

 கதிர் என்றால் சூரிய ஒளி.
காமம் என்றால் ஊர்.

 கதிர்காமம் மிகப்பழமையான பின்னணியைக் கொண்டது.
 என்றாலும் சான்றுகளின் படி தமிழருக்கு சாதகமான ஆதாரங்களே சிங்களவர் முன்வைக்கும் சான்றுகளை விட பழமையானவை.

 கி.பி. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னன் தாட்டியன் என்பவனின் கல்வெட்டு (Epigraphia Zeylonica, Vol 3, PP 216 - 219) கதிர்காமத்தில் உள்ளது.
 இதில் இவன் பௌத்த மதத்தைச் சேர்ந்தவன் என்றும் கிரிவிகாரை என்னும் புத்தமடத்திற்கு தானம் அளித்தான் என்றும் கூறப்பட்டுள்ளது.

   இலங்கையில் முருகன் பற்றிய முதல் குறிப்பு, கி.பி 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சூளவம்சத்தில் வருகின்றது.
 அதாவது இரண்டாம் காசிபனின் (கி.பி 652 – 661) மகனான மானவர்மன், குமாரனை வழிபட்ட செய்தி அதில் உண்டு.

 கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் ஒரு முக்கிய சான்று.

 அதில்,
 கருங்குரங்குகள் பலா மரத்தின் சுளைகளைக் கீறி சண்டையிட்டு உண்டபடி,
 மாமரங்களிலும் வாழை மரங்களிலும் பாயும்
அத்தகைய அழகிய ஈழநாட்டில் திர்காமம் அமைந்திருக்கிறது.
 அந்தக் கதிர்காமம் மிகப்பழைமையான ஊர்.
 அதனருகே வடக்கிலிருந்து வந்து பாயும் அழகான ஆறு உள்ளது.
 அதன் அலைகள் கதிர்காமத்தில் வீசுகின்றன.
 அந்த ஆறு, மாணிக்கங்களை உருட்டியபடி சரிவாக ஓடிவருகின்றது.
 யானைகள் நிறைந்த மலையில் வள்ளியை மணந்த பெருமான், பொன்மாணிக்க வடிவில் கதிர்காமத்தில் அமர்ந்திருக்கிறான்.
 அவன் வேல் தரித்தவன். அவ்விறைவனை அனுமான் வணங்கியுள்ளான்.
 ஆயிரம் கோவில்கள் இருக்க, கோடி மலைகள் இருக்க அவற்றையெல்லாம் விடுத்து கதிர்காமத்தில்தான் அடியவர்க்கு இரங்கிய முருகன் வருகிறான்.
 என்றெல்லாம் பாடுகிறார் அருணகிரியார்.

 திருப்புகழில் கதிரகாமம், கதிர்காமம், கதிரகாம மாநகர், கதிரகாம மூதூர், கதிர்க்காமம், கதிரகாமக் கிரி, கதிரகாம வெற்பு என்றெல்லாம் இத்தலம் போற்றப்படுகிறது.

 மேலும் அருணகிரிநாதர்,
கதிர்காமக் கந்தன் “வனமுறை வேடர் அருளிய பூசையில்” மகிழ்ந்தவன் என்று சொல்கிறார்.
 வாய்கட்டிப்பூசை, திரைமறைத்த கருவறை, அருவ வழிபாடு முதலான இன்றைய வழிபாட்டு முறைகளை அவர் பாடவில்லை.
 பழங்குடிகளான வேடர்களின் வழிபாடு பற்றி கூறியுள்ளார்.

 ஆனால் கோவிலும் சிலையும் இருந்துள்ளதை அவர் பாடியுள்ளார்.
 “கனகமாணிக்க வடிவம் கொண்டவன்” என்றும்,
 “கதிர்காமத்தின் மத்தியிலுள்ள சோதி மண்டபத்தில், இந்திரநீல மாணிக்கத்தால் செய்யப்பட்ட சிம்மாசனத்தில் வள்ளி, தெய்வானை, வேல் என்பன அருகிருக்க கதிர்காம நாதர் வீற்றிருக்கிறார்” என்றும் பாடியுள்ளார்.

 ஆங்கிலேய ஆட்சியின்போது இக்கோவிலை அரசிடம் ஒப்படைக்க ஆங்கிலேயர் வலியுறுத்தியபோது சர். பொன்னம்பலம் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தடுக்கப்பட்டது.

 கதிர்காமத்துக்கு 1819இல் வருகை தந்த “சர் ஜோன் டேர்வி” எனும் ஆங்கிலேயர்,
 “கிளர்ச்சிக் காலத்தில் இங்கிருந்த விக்கிரகம் அகற்றப்பட்டு காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
 எனினும் இன்றும் முன்பு போலவே கருவறையை மிகக் கடுமையாகப் பாதுகாத்து வருகிறார்கள்.”
 என்கிறார்.
 அவர் சொல்கின்ற கிளர்ச்சி 1818இல் இலங்கையையே உலுக்கிய ஊவா - வெல்லசை கலவரம் ஆகும்.

 இந்த கலவரத்தின்போது சிங்களவர்கள் கதிர்காம ஆலயத்தைக் கைப்பற்றினர்.
 தமிழ் அந்தணர்கள் கவர்னர் ராபர்ட் பிரவுன்ரிக் இடம் முறையிட்டதன் பேரில் சிங்களர்களை விரட்டிய ஆங்கிலேயர் மீண்டும் அந்தணர்களிடம் ஒப்படைத்து இராணுவ பாதுகாப்பு கொடுத்தனர்.

 சில காலம் கழித்து இராணுவ பாதுகாப்பு அகற்றப்பட்டதும் மீண்டும் சிங்களர் இதைக் கைப்பற்றினர்.

 இப்படித்தான் கதிர்காமம் சிங்களவரால் ஆக்கிரமிக்கப்பட்டது.

 ஆங்கிலேயர் வெளியேறிய பிறகு சிங்களவர்கள் கோவிலுக்கு வரும் மலைப்பாதையை அடைத்து பிரச்சனை செய்தனர்.

 இதனால் தத்தாராமகிரி சுவாமிகள் என்பவரது தலைமையில் ஆலயத்தை மீட்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

 1946 இல் அவர் தலைமையில் மலையேறிய தமிழர்கள் தாக்கி விரட்டப்பட்டனர்.

 1960 களில் அரசாங்கம் இப்பகுதியை அபிவிருத்தி பிரதேசம் என்று அறிவித்தது.

 அதன்பிறகு தத்தாராமகிரி இருப்பிடமான கொழும்பில் உள்ள இராமகிருஷ்ண மடத்தை பல முறை தாக்கிய சிங்களர்கள் 1970 இல் இராணுவத்தினர் ஆதரவுடன் முற்றிலுமாக கொள்ளையடித்தனர்.

 1972 இல் தத்தாராமகிரி கோவிலைச் சுற்றி கட்டியிருந்த கட்டிடங்கள் அரசாங்கத்தால் இடிக்கப்பட்டது.
 கோவிலைச் சுற்றி தத்தாராமகிரி வசம் இருந்த நிலங்களையும் பிக்குகள் அரச ஆதரவுடன் ஆக்கிரமித்தனர்.

 சிங்கள பௌத்த பேரினவாதம் தலைதூக்கிய பிறகு ஜே.ஆர். ஜெயவர்த்தனா தேர்தல் வாக்குறுதியில் தனது முதல் கையெழுத்தே கதிர்காமத்தை சிங்களருக்கு எழுதி கொடுத்து போடுவதாக இருக்கும் என்று வாக்களித்தார்.

 1978 இல் இது பற்றி வெளியான செய்தியில் கதிர்காமத்தைக் கைப்பற்றி பௌத்த விகாரையாக மாற்றிக் கொண்டிருந்த சிங்கள மடாதிபதிகளுக்கு அக்கோவில் மற்றும் அதைச்சார்ந்த 200 ஏக்கர் நிலத்தை தானமாகக் கொடுப்பதாகவும்
 அதுவும் தலைமை மடாதிபதி 'ரத்மலானே ஸ்ரீ சித்தார்த்த தேரோ' என்ற பிக்குவின் பெயருக்கு தனிச்சொத்தாக கொடுப்பதாகவும் இருந்தது.

 ஆனால் பெரும் முயற்சிசெய்து இதை நடைபெற விடாமல் தமிழ் அரசியல்வாதிகள் அடங்காத் தமிழர் சுந்தரலிங்கம் தலைமையில் செயல்பட்டு தடுத்துவிட்டனர்.

 முதலில் நுழைவாயிலில் இருந்த தமிழ் ஓம் அகற்றப்பட்டது.

 இன்று கதிர்காமம் கோவில் நுழைவாயிலில் கொட்டையான சிங்கள எழுத்துகளில் ருகுணு மகா கடரகம என்று எழுதப்பட்டிருக்கிறது.

 உள்ளே நுழைந்ததும் காணப்படும் பிள்ளையார் இப்போது கண தெய்யோ ஆகிவிட்டார்.

 விஷ்ணு சிலை அகற்றப்பட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

 கோவிலின் பத்துநாள் திருவிழா ஒவ்வொரு முறையும் பல மாற்றங்களை சந்தித்துவருகிறது.

 சிங்களவர் இவ்வளவு தீவிரமாக உரிமை கொண்டாட என்ன காரணம்?

 கதிர்காமம் சிங்களவருக்கு சொந்தம் என்பதற்கு அவர்கள் காட்டும் ஆதாரங்கள் இரண்டு.

 ஒன்று,
 எல்லாளனை வெல்வதற்காக உரோகண மன்னன் துட்டகைமுனு கதிர்காமக் கடவுளிடம் நேர்த்திக்கடன் வைத்து, வென்றபின் இக்கோவிலைக் கட்டியதாக 'கந்த உபாத' எனும் அண்மைய கால சிங்கள நூலில் சொல்லப்பட்ட கட்டுக் கதை.

 இன்னொன்று மகாசேன மன்னன் இறந்தபின்னர், இங்கு அவனுக்காக அமைக்கப்பட்ட நினைவாலயமே கதிர்காமம் என்கிற கட்டுக்கதை.

 இந்தக் கதைகள் எதுவும் பழைமையான நூல்கள் எதிலும் காணப்படவில்லை.

 கதிர்காமம் 'காஜரகாமம்' என்ற பெயரில் இரு தடவை மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 முதல் தடவை, சங்கமித்தை கொணர்ந்த வெள்ளரசுக் கிளையை நாட்டும் சடங்கில் காஜரகாம – சந்தனகாம சத்திரியர்கள் கலந்துகொண்டதைச் சொல்கின்றது.

 அடுத்தது தப்புல மன்னன், காஜரகாமத்தில் பௌத்த மடம் அமைத்தது பற்றிய செய்தி.

 [பௌத்தம் தமிழராலும் பின்பற்றப்பட்ட மதம்.
 மகாவம்சத்தில் சிங்களவர் பற்றி எதுவுமே இல்லை.
 அதில் வருவதெல்லாம் பௌத்தர் மற்றும் பிற சமயத்தினருக்குமான மோதல் மற்றும் பௌத்த சமயத்தின் இரு பிரிவுகளுக்கு இடையேயான மோதல் போன்றவையே.
 இதில் வரும் பௌத்தத்தை சிங்களமாக திரிக்கின்றனர்]

 கதிர்காமம் முழுக்க சிங்கள மயமாகிவிட்டாலும் இன்றும் அது முருகன் கோவில்தான்.

 அதில் வழிபாட்டு முறைகள் சிறிது திரிந்துவிட்டாலும் சிங்கள - பௌத்த பேரினவாத சக்தியால் அது முழுமையாக விழுங்கப்படவில்லை.

 மணிமேகலை காலம் முதல் ராஜராஜன் காலம் வரை பௌத்தத்தை பின்பற்றி வந்த தமிழர்கள் சைவ வைணவ எழுச்சிக்குப் பிறகு அம்மதத்தை முழுமையாக கைவிட்டபோது சிங்களவர்கள் அதைப் பற்றிக்கொண்டு பௌத்த வரலாற்றையே தமதாக்கிக் கொண்டனர்.

 கதிர்காம முருகனை தமதாக்கிக் கொண்டு முருகனாக ஏற்கவும் முடியாமல் பௌத்தமாக திரிக்கவும் முடியாமல் அல்லாடுகிறார்கள்.

 இதேபோல நம் கையைவிட்டுப்போன அனுராதபுரம் நம்முடையதுதான் என்பதற்கு அபயகிரி பௌத்த விகாரையில் காணப்படும் கிபி 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி கல்வெட்டு ஒன்று சான்றாக உள்ளது.

 கதிர்காமத்தைப் பொறுத்தவரை அது தோன்றிய காலத்தைய பழமையான சான்று  இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை.

 கதிர்காமத்தை மீட்டு முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தினால் கட்டாயம் ஒரு வலுவான சான்று நமக்குக் கிடைக்கும்.