Thursday 18 February 2016

பறையரையும் இசுலாமியரையும் கேவலமாகப் பேசிய ஈ.வே.ரா

பறையரையும் இசுலாமியரையும் கேவலமாகப் பேசிய ஈ.வே.ரா

ஈ.வே.ரா தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடினார் என்று சிலர் கூறுகிறார்கள்.

அவர் பறைச்சி ரவிக்கை போட ஆரம்பித்தது துணிவிலை ஏறக் காரணம் என்று பேசியது பலராலும் அன்று கண்டிக்கப்பட்டது.

அவர் அவ்வாறு பேசவில்லை என்றும் சிலர் கூறுகிறார்கள்.

ஈ.வே.ரா பறையர்களை இழிவாகப் பேசினாரா?
தாழ்த்தப்பட்ட மக்களை அவர் எவ்வாறு நோக்கினார் என்று இங்கே அலசுவோம்.

இந்த பேச்சை கருணாநிதி தனது முரசொலியில் 1962 ம் ஆண்டின் பொங்கல் சிறப்பு இதழில் கோட்டோவியம் (கார்ட்டூன்) போட்டு வெளியிட்டார்.
(அப்போது திமுக வும் ஈவேராவும் எதிரிகள்.
1968ல் சேர்ந்துகொண்டார்கள்.
இவர்கள் சேர்ந்துகொண்ட பிறகு ஆறாண்டுகள் கழித்து ஈவேரா பேசிய சப்பையான விளக்கத்தைதான் பதிலாகத் தந்து பலரும் அவர் நல்லவர் என்று காட்ட முயல்கிறார்கள்)

அன்பு பொன்னோவியம் என்பவர் 2.3.1963 அன்றைய "நாத்திகம்" வார இதழுக்கு 'ஆசிரியர் அவர்களுக்கு' பகுதியில் "ஆதி திராவிடர்களும் பெரியாரும்" என்ற தலைப்பில் கடிதமொன்றை எழுதினார்.

அந்த கடிதம் ஈ.வே.ரா பறையர்களை இழிவாகப் பேசியதையும் அதன்பிறகு அதற்கு சரியான விளக்கமோ மன்னிப்போ கூறாதிருந்ததையும் வெட்டவெளிச்சம் ஆக்குகிறது.
ஈவேரா ஆரம்பித்திலிருந்தே இப்படி பேசிவந்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கீழே படியுங்கள்

** "துணி விலை ஏறி விட்டதற்கு காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவது தான்!
வேலையில்லாத திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்து விட்டது தான்"
என்று பெரியார் கூறியதாகச் செய்திகள் வந்த போது மலைத்து விட்டவர்களில் நானும் ஒருவன்.

ஆனால் தாங்கள் குறிப்பிட்டதைப் போன்று நான் அப்பாவி அல்ல.
ஏனெனில், 1939ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை பெரியாரை கூர்ந்து கவனித்து வரும் பல பேர்களில் நானுமொருவன்.

எங்களது நினைப்பிற்கு காரணம் பெரியார் அவர்களோ, அன்றி அவரது பத்திரிகையோ,

அது பற்றிய விளக்கத்தை தராமையாலும்,
பொதுக் கூட்டங்களிலும் கூட அதைப்பற்றி பேச்சு எழாததாலும்,
குறிப்பாக சமீபத்தில் நடந்த மாநாட்டின் போது அதைப் பற்றிய தகவல் எதையும் தெரிந்து கொள்ள முடியாத காரணத்தாலும் எங்களுக்கு மலைப்பு ஏற்பட்டதில் தவறில்லை.
பெரியார் பல சமயங்களில் ஆதி திராவிட மக்களைச் சாடி பழித்துப் பேசியிருக்கிறார்.**

சென்னையில் அம்பேத்கரிஸ்ட்கள் நடத்திய 'அம்பேத்கர்' இதழின் சூட்டுகோல் பகுதியில் (1963 நவம்பர் & டிசம்பர்)

"ஒரு முறை ஈ.வெ.ரா.
துணி விலை ஏறி விட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கை போடுவது தான்.
வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்து விட்டதுதான் என்று கூறினார்.
அன்று மறுப்பு கூறினோம்."
என்று வெளியானது.

கே.எஸ். சீதாராமன் அவர்கள் தான் எழுதிய
"கோலார் தங்கவயல் வரலாறு" எனும் (1989. பக்.193) நூலிலும் பெரியாரின் இந்தப் பேச்சை சுட்டிக்காட்டி திராவிடர் வேறு, ஆதி திராவிடர் வேறு என்றே பெரியார் கருதியதாக குறிப்பிடுகிறார்.

இனி தாழ்த்தப்பட்டவரை ஈவேரா எப்படி பார்த்தார் என்று அலசுவோம்

"தீண்டாமை விலக்கு விசயத்தில் நான் ஏதாவது ஒரு சிறிதாகிலும் வேலை செய்திருப்பதாக ஏற்படுமானால் அது எங்கள் நலத்திற்காகச் செய்ததாகுமேயொழிய உங்கள் நலத்திற்கென்று செய்ததாக மாட்டாது."
(குடியரசு 16.6.1926.)

இங்கே நாங்கள் என்பது பார்ப்பனரல்லாத ஆதிக்கசாதியினரை
நீங்கள் என்பது தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாவோரை
(அதாவது தாழ்த்தப்பட்டவரை)

"ஆதி திராவிடர் நன்மை கருதிப் பேசப்படும் பேச்சுகளும் செய்யப்படும் முயற்சிகளும் ஆதி திராவிடரல்லாத மக்களில் பார்ப்பனரல்லாத எல்லோருடைய நன்மைக்கும் என்பதாக உணருங்கள்"
(குடியரசு 11.10.1931)

இதன்பொருளும் மேற்கண்டதை ஒத்ததே.

அதாவது பார்ப்பனரல்லாத ஆதிக்கசாதிகளின் தளபதியாகத்தான் ஈவேரா தன்னை முன்னிறுத்தியுள்ளார்.

அவர் தாழ்த்தப்பட்டோரை மட்டுமன்றி கிறித்துவ இசுலாமியரையும் கேவலமாகக் கருதினார்.
ஈ.வே.ரா தானே வெளியிட்ட அவரது 85வது பிறந்தநாள் விழா மலரில் (17.09.1963) எவ்வளவு கேவலமாக எழுதியுள்ளார் என்று பாருங்கள்.

// 1.பார்ப்பனர்கள்
2.நம்மில் கீழ்த்தர மக்கள்
3.முஸ்லீம்கள்
4.கிறித்துவர்கள்

ஆக இன்று நமக்கு சமுதாய எதிரிகளாக இந்த நான்கு கூட்டங்கள் இருக்கின்றன.//

அதாவது தாழ்த்தப்பட்டோர் கீழ்த்தரமானவர்களாம்.
பார்ப்பனர்களைப்போல பிறமதத்தினரும் தாழ்த்தப்பட்டோரும் பிராமணரல்லாத சாதியாருக்கு எதிரிகளாம்.

மேலும் கூறுவதைப் பாருங்கள்.

// நம்மில் கீழ்த்தர மக்கள் என்பவர்கள் தங்களுடைய இழிநிலை பற்றி கவலை இல்லாதவர்கள்.

சோறு, சீலை, காசு ஆகிய மூன்றையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டவர்கள்//

ஆக தனது 85 வயது வரை ஈவேரா தாழ்ப்பட்டோரை இழிவாகத்தான் கருதியுள்ளார்.

பறையர்களைக் கேவலமாகப் பேசிய அதே ஆண்டு அவர் சிறுபான்மையினரையும் இசுலாமியரையும் கேவலமாக எழுதியுள்ளார்.

"நாட்டு இலட்சணப்படி எந்த நாட்டிலும் மைனாரிட்டி (சிறுபான்மையினர்) சமூதாயம், மதம், கலாச்சாரம் கொண்ட மக்களுக்கு ஆதிக்கமோ, செல்வாக்கோ இருக்குமானால் அது அந்த நாட்டின் நலத்துக்கு, பொது வளர்ச்சிக்கு கேடாகவே முடியும்.

மைனாரிட்டிகளான பார்ப்பனர், முஸ்லீம் ஆகியவர்களுக்கு அந்நிய ஆட்சியும், காங்கிரசும் காட்டி வந்த சலுகைகளாலும்,
தனி நீதி போன்ற காரணத்தினாலும்,
மேலும் அவர்களது ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்ததனாலும்,

நாடு வளர்ச்சி அடையாமலும், மெஜாரிட்டி மக்கள் மனிதத் தன்மை பெறாமலுமே போய் விட்டார்கள்!

குறிப்பாகத் தமிழ்நாட்டின் இன்றைய நிலைக்கு இதுவே காரணம் என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்.
இதற்கு உதாரணம், இந்த நாட்டில் இன்று மைனாரிட்டியாக உள்ள சமுதாயத்திற்கு இருந்து வரும் வசதியும், ஆதிக்கமும், நடப்பு வசதியுமேயாகும்.

அதாவது 100-க்கு 90 விகிதம் உள்ள இந்நாட்டுப் பெருவாரி சமுதாய பெண்கள் நாற்று களை பிடிங்கி,
ரோட்டில் கல் உடைத்து,
வீதியில் மக்கள் நடக்க மண் சுமந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் 100-க்கு 6- விகிதம் உள்ள முஸ்லிம் பெண்கள் உடலுமைப்பு வேலைகள் எதுவும் செய்யாமல்,
அவர்கள் பெண்கள் நம் மனிதர்கள் கண்ணுக்கே தென்படக் கூடாது என்கின்ற நிலையிலும்,
பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உள்பட கோஷா முறையில் உழைப்பில்லாமல் வாழும் முறையை இந்த நாட்டில் சொகுசாக அனுபவிக்கிறார்கள்!
- ஈவெரா (விடுதலை 6.3.1962)

ஈவேரா பார்ப்பனரை பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தை ஆதிக்கசாதிகள் பிடிக்க உழைத்தவரே அன்றி அவர் தாழ்த்தப்பட்டோருக்காகச் சிறுதுரும்பையும் அசைத்ததில்லை.

ஏற்கனவே டி.கே.மாதவன் என்பவர் நடத்திவந்த வைக்கம் போராட்டத்தில் ஈவேரா கடைசியாக பத்தோடு பதினொன்றாகத்தான் போய் கைதானார்.

நாடார் ஆலையநுழைவுப் போராட்டத்தில் அவர் கலந்துகொண்டதும் இவ்வாறே.

ஆக கடைசிக்கட்டத்தில் போய் பங்குகொண்டு ஏதோ தானே முதலில் இருந்து முன்னின்று நடத்தியதைப் போலப் பீற்றிக்கொள்வது அவர் பாணி.
அவரது சீடர்களும் அந்த போராட்ட வரலாற்றை அப்படியே ஈவேராவுக்கு எழுதிவைப்பார்கள்.

பெரியாரால்தான் இதெல்லாம் நடந்தது என்பதைப்போல திரித்து எழுதுவார்கள்.

இனியும் இப்பொய்யர்களை நம்பவேண்டாம்.

Wednesday 17 February 2016

ஈ.வே.ரா தனித்தமிழ்நாடு கேட்டாரா?

ஈ.வே.ரா தனித்தமிழ்நாடு கேட்டாரா?

மூன்றுமுறை நிறம் மாறிய பச்சோந்தி
--------------------------------
1930ல் இந்திய சார்பு

" இந்திய மக்கள் எவ்வித முன்னேற்றமோ, விடுதலையோ, சுதந்திரமோ பெறுவதற்குத் தங்களை அருகர்கள் என்று சொல்லிக் கொள்ளுவதற்கு முன்பாக
இந்தியர்கள் ஒரே சமூகத்தார், ஒரே இலட்சியமுடையவர் என்கின்ற நிலையை அடைய வேண்டியது மிகவும் முக்கியமானது என்பதைப் பற்றி நாம் யாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றோம்.
இன்று முற்போக்கோ, சுதந்திரமோ, விடுதலையோ அடைந்திருக்கும் நாட்டார்கள் எல்லாம் முதலில் தங்கள் நாட்டாரெல்லாம் ஒரே சமூகத்தார் என்றும்,
ஒரே இலட்சியமுடையவர்கள் என்றுமான பிறகுதான் அவர்கள் முன்னேறவும், விடுதலைப் பெற்று சுதந்திரமடையவும் முடிந்தது என்பதையறியலாம்"
('குடிஅரசு', 09.11.1930)
-----------------------
1938 ல் தனித்தமிழ்நாடு

உதைக்கும் காலுக்கு முத்தமிட்டுப் பூசை செய்கிறோம்.
மலத்தை மனமார முகருகிறோம். மானமிழந்தோம், பஞ்சேந்திரியங்களின் உணர்ச்சியை இழந்தோம்.
மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம்.
இதற்குத்தானா தமிழன் உயிர்வாழ வேண்டும்?
எழுங்கள்! நம்மை ஏய்த்து அழுத்தி, நம் தலைமேல் கால்வைத்து ஏறி மேலே போக வடநாட்டானுக்கும், தமிழரல்லாதவனுக்கும் நாம் படிக்கல் ஆகிவிட்டோம்.
இனியாவது, ‘தமிழ்நாடு தமிழருக்கே!’
என்று ஆரவாரம் செய்யுங்கள்!
உங்கள் கைகளில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள்!
உங்கள் வீடுகள் தோறும் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள்.
நம் வீட்டுக்குள் அந்நியன் புகுந்துகொண்ட தோடல்லாது, அவன் நம் எஜமான் என்றால்
நமக்கு இதைவிட மானமற்றதன்மை, இழிதன்மை வேறு என்ன எனச் சிந்தியுங்கள்!
புறப்படுங்கள்! தமிழ்நாட்டுக்குப் பூட்டப்பட்ட விலங்கை உடைத்துச் சின்னா பின்னமாக்குங்கள்!
தமிழ்நாடு தமிழருக்கே! -
(குடிஅரசு 23.10.1938)
----------------
1947 ல் மீண்டும் இந்திய சார்பு

“தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்கவேண்டும் என்பதும்,
தமிழரசு, தமிழராட்சி, தமிழ்மாகாணம் என்று பேசப் படுவனவெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப்படுகிற காரியங்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும்.” (ஈ.வெ.ரா.,விடுதலை 11.01.1947)
---------------------------
1957 ல் மீண்டும் தனித்தமிழ்நாடு

“என் பிறவி காரணமாக என் இன இழிவுக்குக் காரணமாக இருக்கும் சாதியை ஒழிப்பதும்
என் இன மக்களாகிய தமிழர்களுடையவும்,
என்னுடையவும் தாய் நாடான தமிழ்நாட்டைப் பனியா - பார்ப்பனர்களின் அடிமைத்தளையிலிருந்தும்,
சுரண்டலிலிருந்தும் மீட்டுச் சுதந்திரமாக வாழ வைக்க வழி செய்வதுமான தனித் தமிழ்நாடு பெறுவதும் என் உயிரினும் இனிய கொள்கைகளாகும்.
அந்த இலட்சியங்களை அடையத் தகுந்த விலையாக என் உடல், பொருள், ஆவி ஆகிய எதையும் கொடுப்பதற்கு உடன்பட்டே நான் இப்போது சிறை செல்கிறேன்,
சென்று வருகிறேன்.
வணக்கம்! வணக்கம்! வணக்கம்!" (விடுதலை தலையங்கம் 15.12.1957)
-------------------------
1965 ல் மூன்றாவது முறையாக இந்திய சார்பு

இந்தியா ஒண்ணா இருக்கணும்னா பொதுவா ஒரு ஆட்சிமொழி வேணும்தானே?
இந்திக்காரன் உங்க மாதிரி இங்கிலீஷை நினைக்கல்லையே.
இங்கிலீஷ் அவமானம்னு நினைக்கிறானே.
தமிழ்நாட்டுக் காரன் சொல்றபடி இந்தியா நடக்குமா?
அது ஜனநாயகமா?
(ஆனந்தவிகடன் பேட்டி 11.4.1965)
---------------------------
1973 ல் மூன்றாவது முறையாக தனித்தமிழ்நாடு

“நாம் சட்டத்தைப் பற்றிப் பயப்படாமலும்
பதவி கிடைக்காதே என்று கவலைப்படாமலும்
‘சுதந்திரத் தமிழ்நாடு’ பெற ஒவ்வொருவரும் முடிவு செய்து கொண்டு முன் வர வேண்டிய ஒவ்வொரு தமிழனுக்கும் அவசியமான காரியம் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
‘சுதந்திரத் தமிழ்நாடு எனது இலட்சியம்’ என்ற சொற்களை ஒவ்வொருவரும் இலட்சியச் சொல்லாகக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.
பதினாயிரக்கணக்கில் பாட்ஜுக்கு ஆர்டர் கொடுத்துத் தயார் செய்து மக்களுக்கு வினியோகிக்க ஆசைப்படுகிறேன்.
பொது மக்களுக்கும் இதுவே இலட்சியச் சொல்லாக (கூப்பாடாக) இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
பொது மக்களே! இளைஞர்களே!
பள்ளி, கல்லூரி மாணவர்களே! மாணவிகளே!
உறுதி கொள்ளுங்கள்!
உறுதி கொள்ளுங்கள்!
உறுதி கொள்ளுங்கள்."
(1973-ல் பிறந்த நாள் அறிக்கையில்)

ஒரு வந்தேறி(?) அளிக்கும் வாக்குமூலம்

ஒரு வந்தேறி(?) அளிக்கும் வாக்குமூலம்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
என் தமிழ் உறவுகளே,
உங்களுக்கு இந்த தமிழ்மண்ணில் பிறந்துவளர்ந்த ஒரு "வந்தேறி"யின் வணக்கம்.

எங்கள் முன்னோர்கள் எப்போதோ நான்கைந்து தலைமுறைகளுக்கு முன் இந்த வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டிற்கு வந்தார்களாம்.

இன்று எங்களுக்கு தமிழையும் தமிழ்நாட்டையும் தவிர எதுவும் தெரியாது.
தமிழ்தான் எழுதப் படிக்கத் தெரியும்.
தற்கால தலைமுறையினர் தங்களுக்குள் தமிழில்தான் பேசிக்கொள்கின்றனர்.

நாங்கள் பணக்காரர்களும் இல்லை.
தமிழர்கள் கவலைப்படும் அளவுக்குப் பெரும்பான்மையும் இல்லை.

நாங்கள் 50,100 ஆண்டுகளுக்கு முன்பு வந்த மக்களைப் போல தாய்நிலத்துடன் தொடர்புடையோர் கிடையாது.
இங்கேயிருந்து விரட்டப்பட்டால் எங்களுக்கு வேறு கதியும் இல்லை.

வீட்டிற்குள் நாங்கள் பேசும் மொழி அதன் அசல் வடிவத்துடன் ஒத்துப்போவதில்லை.
எங்கள் தாய்மொழி நிகழ்ச்சிகளை தொலைகாட்சிகளில் எப்போதாவது பார்ப்போம்.
அது ஓரளவு புரியும்.

தமிழகத்தில் எங்களுக்கு எதிராக எதாவது பிரச்சனை என்றால் எங்கள் பூர்வீக மாநிலத்தார் எங்களுக்காகக் குரல் கொடுக்கவும் மாட்டார்கள்.
அவர்கள் எங்களைத் தமது இனமாக எண்ணுவதும் இல்லை.

மற்ற மாநிலங்கள் தமிழர்களைக் கொடுமை செய்தபோதும் எம் தமிழ்ச் சொந்தங்கள் எங்களை எதிரியாகப் பார்த்ததே இல்லை.

நாங்களும் தமிழ் உணர்வுடன்தான் வாழ்கிறோம்.
நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ நாங்கள் தமிழ்ப் பற்றுடன்தான் வாழ்கிறோம்.
எங்கள் சாதியிலேகூட தமிழ் எழுத்தாளர்களும் தமிழுக்காகப் போராடியவர்களும் உண்டு.
வெளிமாநிலத்தில் வேலை செய்யும் என் உறவினர்கள் தமிழர்களுடன்தான் சேர்கிறார்களே ஒழிய எங்கள் பூர்வீக மாநிலத்தாருடன் சேர்வதில்லை.
எப்படி சேர்வார்கள்?
எங்கள் தாய்மொழி அதன் அசல் வடிவத்துடன் ஒத்துப்போவதில்லை.
அவர்கள் பண்பாடு கலாச்சாரம் நாட்டுநடப்பு என எதுவும் எங்களுக்கு தெரியாது.

இன்று இளைய தலைமுறையினர் நிறைய மாறிவிட்டனர்.
திராவிடம் என்ற பெயரில் வந்தேறிகள் சுரண்டுவதாக முகநூலில் பல்வேறு ஆதாரங்களுடன் பதிவிடுகிறார்கள்.

நன்கு ஆராய்ந்து பார்த்ததில் அது உண்மை என்று தெரிகிறது.
எங்கள் மக்கள் அப்பாவிகள்.
அவர்கள் திராவிட கட்சிகளை ஆதரிப்பது சாதிப்பாசத்தால்தான்.
தமிழகத்தில் வேற்றினத்தார் ஆதிக்கம் கொடிகட்டிப் பறப்பது உண்மைதான்.
ஆனால் அது மக்களில் சில கொள்ளைக்காரர்கள் செழிக்க வழிசெய்துள்ளதே தவிர வேற்றின மக்களுக்கு சிறிதளவுதான் பயன்பட்டுள்ளது.

பல தலைவர்கள் பிறப்பால் வேற்றினத்தவர் என்பதே எனக்கும் தற்போதுதான் தெரிகிறது.
தமிழரல்லாதோர் தன் சொந்த அடையாளத்தை வெளியே சொல்லாமல் திராவிடம் என்ற பெயரில் தமிழர்களை ஏமாற்றி வந்துள்ளனர்.

திராவிடம் சரியான பாதையில் சென்றிருந்தால் இது தலைகீழாக நடந்திருக்கவேண்டும்.
திராவிடம் என்பது தென்னிந்திய இனங்கள் தமிழ்வழி வந்தவை என்ற பார்வையுடன் முழு தென்னிந்தியாவையும் இணைத்து அதில் தமிழின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கச் செய்திருக்கவேண்டும்.

ஆனால் திராவிடம் தமிழர்களை ஏமாற்றி தமிழரல்லாதார் பிழைப்பதற்குள் பிற மாநிலங்கள் தமிழகத்தை மதிக்காமல் திமிருடன் நடப்பதற்குமே வழிசெய்கிறது.

நான் திராவிடவாதி போல 'இது இந்தியா இங்கே எல்லாருக்கும் ஆள உரிமை உண்டு' என்று மழுப்பமாட்டேன்.

மற்ற மாநிலங்களில் அந்த அந்த மாநில மக்கள் ஆள்வதைப் போல இங்கே ஒரு தமிழர் ஆள்வது மட்டும் போதாது.
எனக்கு மிகவும் பிடித்த தானைத்தலைவர் பிரபாகரன் வழியில் போராடி தனித் தமிழ்நாடு அடையவும் வேண்டும்.

இதற்கு தமிழ்நாட்டின் உப்பைத் தின்ற நாங்கள் தோளோடு தோள்கொடுப்போம்.

இதன்மூலம் நாங்கள் தமிழர்கள் என்று ஆகமுடியாவிட்டாலும் தமிழர்நாட்டின் குடிமக்களாக ஆகமுடியும்.

ஆக இன்றிலிருந்து நான் திராவிடத்தையும் அதன் பின்னால் என் போன்றோரை கேடயமாக்கிக்கொண்டு ஒழிந்திருக்கும் தமிழின துரோகிகளையும் எதிர்க்கிறேன்.

பிறப்பால் ஒரு தமிழர் ஆளவேண்டும்.
அதுவும் முப்படையுடன் எவருக்கும் அடிபணியாத தனிநாடாக ஆளவேண்டும்.
மற்ற இனத்தார் எத்தனை சதவீதம் இங்கே வாழ்கிறார்களோ அதற்குத் தகுந்த அதிகாரப் பங்கீடு தந்தால் போதும்.
அதுதான் நியாயம்.
அதுதான் உலக நடைமுறை.
இதுவரை எங்களை அரவணைத்து வாழும் எம் தமிழ்ச் சொந்தங்கள் தங்கள் இனவழிச் சிறுபான்மையினரை சிறப்புடன் பேணுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

தமிழர் விடுதலைக்கும் தன்னாட்சிக்கு குறுக்கீடாக இருப்போர் அவர் வேற்றினத்தார் ஆனாலும்  தமிழராயிருந்தாலும் தமிழ்மண்ணில் வாழ உரிமை இல்லை.

எங்கள் முன்னோர்கள் செய்த பிழைகளை நீங்கள் மறந்துவிடுங்கள்.
எங்களை உங்கள் உடன்பிறந்தோராக ஏற்காவிட்டாலும் தோழர்களாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
இனி எங்களை வந்தேறிகள் என்றழைக்காதீர்கள்.
தமிழ்நாட்டவர் என்றழையுங்கள்.

நம் நாட்டிற்காக நாங்களும் போராடுவோம்.
ஒருவேளை எங்கள் பூர்வீக மாநிலம் தமிழர்களுக்கு கொடுமை செய்தால் அதன்மீது போர்தொடுங்கள்.
அதற்கு எங்களை அனுப்புங்கள்.
தமிழ்நாட்டின் சார்பில் நாங்கள் போய் அவர்கள் கொட்டத்தை அடக்குவோம்.
அவர்கள் எங்களைத் துரோகி என்று கூறினாலும் சரி.

அவர்கள் தண்ணீரை மறிக்கும்போது எங்களையும் சேர்த்துதானே அது பாதித்தது.

தமிழில் இருந்து பிரிந்து 500, 600 முன்பு தோன்றிய தென்னிந்திய மொழிகளை பேசுவோர் தாய் இனமான தமிழினத்திற்கு கேடு செய்ததுதான் துரோகம்.
நாங்கள் பிறந்து வளர்ந்த தமிழ் மண்ணிற்காகப் போராடுவது எப்படி துரோகம் ஆகும்?

எனவே இனியும் துரோகியாக நான் இருக்கப்போவதில்லை.

தாய்மொழி வேறான என் போன்ற தமிழ்நாட்டு குடிமக்களே!

உங்களில் ஒருவன் உங்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன்.
இனி நாம் தமிழர்களுடன் இணக்கமாகப் போவதே நல்லது!

அதுதான் நியாயமும் கூட.

நாம் தமிழ்நாட்டார்!

திராவிடம் ஒழிக!

தமிழ்த் தேசியம் ஓங்குக!

__________________________

? ? ? ? ? ? ? ! ! ! ! ! ! ! ! ! !

இப்படி யாரவது பதிவு போடுவார்கள் என்று நானும் எதிர்பார்க்கிறேன் யாரும் போடுவதில்லை.

தமிழ்தேசியம் கையோங்கட்டும்
வேறு வழி இல்லை என்ற நிலையில் இப்படியான பதிவுகள் வருகிறதா இல்லையா பாருங்கள்.

Monday 15 February 2016

டாக்டர் கொலைஞர்

டாக்டர் கொலைஞர்
---------------------------------

ஒரு காவல்துறை வண்டி வந்து வீடு முன்பு நின்றது.
காவல் அதிகாரி இறங்கி வீட்டிற்குள் சென்றார்.
அங்கே ஒரு இளைஞனின் படம் மாலைபோடப்பட்டு பொட்டுவைக்கப்பட்டு இருந்தது.
கீழே உதயகுமார் என்ற பெயரும் தோற்றம் மறைவு தேதியும் குறிக்கப்பட்டிருந்தது.
கீழே தரையில் சோகத்துடன் முதியவர் அமர்ந்திருந்தார் ஒருவர்.
காவலதிகாரியைக் கண்டதும் நடுங்கியபடி எழுந்தார்.

"இன்னக்கிதான் விசாரணை உடனடியா கிளம்பு"

அதிகாரத் தேரணையில் கூறினார் அந்த அதிகாரி.

முதியவரை வண்டியில் ஏற்றுக்கொண்டு சென்றனர்.

வழிநெடுக 'டாக்டர்' கலைஞர் வாழ்க என்ற சுவரொட்டிகளும் பதாகைகளும் காணப்பட்டன.

நீதிமன்ற வளாகத்தின் பின்பகுதியில் தனியாக இருந்த ஒரு கட்டிடத்தில் நுழைந்தனர்.

சுற்றிலும் மக்கள் யாரும் இல்லை.
அந்த கட்டடத்தில் வெளித்திண்ணையில் திமுக கரைவேட்டி கட்டிய பத்துபதினைந்து தடியர்கள் நின்றுகொண்டிருந்தனர்.
அவர்கள் கண்கள் சாராயபோதையில் சிவந்திருந்தன.
கூடத்தில் நுழைந்ததும் அங்கே சிலர் மட்டும் அமர்ந்திருந்தனர்.

நீதிபதி வந்தார்.
வழக்கு தொடங்கியது.
வழக்கறிஞர் டாக்டர் பட்டம் கண்டவர்களுக்கும் வழங்கப்படுவதை எதிர்த்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்  உதயகுமாரை  கொலைசெய்தது தி.மு.க குண்டர்கள்தான் என்றும்
இது பற்றி அம்மாணவரின் தந்தையை விசாரிக்க வேண்டுமென்றும் கோரினார்.

"சொன்னது நினைவிருக்குல்ல?" காவல் அதிகாரியின் மிரட்டல் குரல் முதியவர் காதில் விழுந்தது.

அவர் நடுக்கத்துடன் கூண்டில் ஏறி நின்றார்.

"உதயகுமார் உங்கள் மகன் தானே?"

"இல்லை" இறுகிய குரலில் கூறினார் முதியவர்.

நீதிபதி அவரிடம் "யாருக்கும் பயப்பட வேண்டாம்.
தைரியமாக உண்மையைக் கூறுங்கள்" என்றார்.

முதியவர் காவலதிகாரியைப் பயத்துடன் பார்க்க நீதிபதி புரிந்துகொண்டு காவலர்களை வெளியேறச் சொன்னார்.
மீண்டும் தைரியமூட்டினார்.
ஆனால் முதியவர் கடைசிவரை உதயகுமார் தனது மகனே இல்லை என்று கூறிவிட்டார்.

நீதிபதி ஆதாரம் போதாது என்று வழக்கை ஒத்திவைத்தார்.

தன் மீதி குடும்பத்தையாவது வாழவிடுவார்கள் என்று மனதைத் தேற்றிக்கொண்டு கூண்டை விட்டு கீழே இறங்கினார்.

விறுவிறுவென உள்ளே வந்த காவலதிகாரி நீதிபதி முன்பே முதியவர் பிடரியில் ஓங்கி ஒரு அறை வைத்தார்.
அங்கே பார்வையாளராக அமர்ந்திருந்தோர் வாய்விட்டு சிரித்தனர்.

நீதிபதி "என்னய்யா? அதான் சொல்லிக்குடுத்தமாதிரி அப்டியேதானே செஞ்சான்?!
அப்பறம் என்ன?"

காவலர் "போயா, உண்மையான விசாரணை நடக்கும்போது இதேமாதிரி என்ன திரும்பிப் பாத்தா என்னாகுறது?"

அப்போதுதான் அந்த முதியவருக்கு இந்த நீதிமன்ற வளாகமே போலியாக வடிவமைக்கப்பட்டது (செட்டப்) என்று புரிந்தது.
அடித்து உதைத்தபடி வெளியே இழுத்துவந்தனர்.

திமுக குண்டர் அருகில் கூட்டம் வந்தது.

அதில் ஒருவன் "இதேமாதிரி உண்மையான விசாரணைல சொல்லணும்.
எடைல திரும்பி அங்க இங்க பாத்த உன் குடும்பமே இருக்காது.
நடக்குறது எங்க ஆட்சி.
எங்க தலைவருக்கு டாக்டர் பட்டம் குடுத்தா உன் மவனுக்கு எங்க வலிக்குது?
ஈனசாதி நாய் நீ பெத்த மவனுக்கு என்ன கொழுப்புனு கேட்டேன்?
கூட்டம் சேந்து எதிர்ப்பு தெரிவிக்குற அளவு வந்துட்டீங்கள்ல?!
இப்ப புரியுதா எங்கள பகச்சா என்ன நடக்கும்னு?!
இனி ஒழுங்கா நடந்துக்கணும்"
என்று மிரட்டினான்.

நீதிபதி வேடம் போட்டவன் வந்தான்
"கவலபடாத பெரிசு.
போனவன் திரும்பிவரவா போறான்?
உனக்கு இன்னொரு மகன் இருக்கான்ல.
அவன் பேரென்ன மனோகரனா?
பி.யூ.சி படிச்சிருக்கான்ல?!
அவன போய் தலைவர பாக்க சொல்லு.
அரசாங்க வேலயோ பணமோ எதாவது தருவாரு"
என்று கூறி தோளில் தட்டிக்கொடுத்துவிட்டை போனான்.

தி.மு.க குண்டர்களும்
காவல்துறையினரும்
நீதிமன்ற நடிகர்களும் சிரித்து பேசியபடி அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சில பணியாளர்கள் வந்து அந்த கூடத்தில் இருந்த நீதிமன்ற பொருட்களை எடுத்துச் சென்றனர்.

ஒரு மணிநேரத்திலு அங்கே ஆள்நடமாட்டம் இருந்த சுவடே தெரியவில்லை.

அந்த நீதிமன்ற வளாகத்தின் கைவிடப்பட்ட கட்டிடத்தில் அனாதையாக நின்றார் முதியவர்.
தன் மகனின் பிணத்தைக் கூட பார்க்கமுடியாத தன் இயலாமையை எண்ணி தனியாக அங்கே நின்று அழுதுதீர்த்தார்.
கால்நடையாக வீடுநோக்கி நடக்கத் தொடங்கினார்.
-------------------------------
கருணாநிதி என்ற பெயருக்கு முன்னாள் இருக்கும் டாக்டர் என்ற நான்கு எழுத்துக்குப் பின் ஒரு தமிழனின் கொலை மறைந்துள்ளது.

கருணாநிதி வீட்டின் ஒவ்வொரு செங்கலிலும்
கருணாநிதியின் குடும்பம் சாப்பிடும் ஒவ்வொரு பருக்கையிலும் தமிழ் உயிர்கள் நசுக்கப்பட்டுள்ளன.